இன்று, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முன்பான 44வது நாளாகும். இவ்வுலகப் பொருட்காட்சி வெற்றிகரமாகவும் தலைசிறந்ததாகவும் நடைபெற, சீன மக்கள் ஏற்பாட்டுப் பணிகளை நல்லபடி நிறைவேற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
இப்போது, உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் கட்டுமானம் அடிப்படையில் முடிவடைந்துள்ளது. அரங்கு மற்றும் தொடர்புடைய வசதிகளின் கட்டுமானப்பணிகளில் 95 விழுக்காடு நிறைவேறியுள்ளது. இது பற்றி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பணியகத்தின் தலைவர் ஹொங்ஹேள அறிமுகப்படுத்தியதாவது:
உலகப் பொருட்காட்சிப் பூங்காவின் கட்டுமானப்பணிகள், திட்டப்படி நிறைவேற்றப்பட்டன. இப்போது, காட்சிக்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினோம். பாதை, பொது வசதிகள் முதலியவை ஏப்ரல் திங்களின் நடுப்பகுதிக்குள் முழுமையாக கட்டியமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
உலகப் பொருட்காட்சிக்காக கட்டியமைக்கப்படும் அடிப்படை வசதிகள் விரைவில், அடுத்தடுத்து திறந்து வைக்கப்படும். அண்மையில் உலக நிலை போக்குவரத்துத் திட்டப்பணியான ஹொங்சியேள போக்குவரத்து மையம் செயல்படத் தொடங்கியது. ஏப்ரல் திங்கள் நடுப்பகுதியில், உலகப் பொருட்காட்சிக்கு மிக முக்கிய இணைப்பு போக்குவரத்து வசதியான ஷாங்காயின் லுங்யாவ் சுரங்கம் கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும்.
உலகப் பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்தும் வகையில், ஷாங்காய் மாநகரம், முன்கண்டிராத அளவில் நகரக் கட்டுமானத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில், நகரத்தின் அடிப்படை வசதிக் கட்டுமானத்துக்கான ஒதுக்கீட்டுத்தொகை, 17 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. இவை, உலகப் பொருட்காட்சியைப் பார்க்க வரும் பயணிகளுக்கு வசதிகளை வழங்குவதோடு, ஷாங்காய் மாநகரத்தின் செயல் திறனையும் உயர்த்தலாம் என்று தெரிகிறது.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி செயற்குழுவின் துணைத் தலைவர் சோ ஹென்மின் தற்போதைய ஏற்பாட்டுப் பணிகள் பற்றி குறிப்பிடுகையில், அரங்குகளின் கட்டுமானம், காட்சிக்கான ஏற்பாடு, சில நாடுகள் இப்பொருட்காட்சியில் கலந்துகொள்வது பற்றிய முன்னேற்றப்போக்கு ஆகியவை முக்கிய பணிகளாக மாறின என்று தெரிவித்தார்.
நடப்பு உலகப் பொருட்காட்சி, சுமார் ஏழு கோடி பயணிகளை ஈர்க்கும். பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், தகவல் முதலிய துறைகளில் ஏற்பாட்டுப் பணிகள் செவ்வனே செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.