ஏப்ரல் 30ம் நாளிரவு 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா ஹுவாங்பூஃ ஆற்றின் கரையில் நடைபெற்றது. அடுத்த 184 நாட்கள், 246 நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஓர் இலக்கை பற்றி, சிந்தித்து, மேம்பட்ட நகரம் மேம்பட்ட வாழ்க்கை என்ற தலைப்பை கூட்டாக விவாதிக்கவுள்ளன.
சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் உள்பட பல சீனத் தலைவர்களும், 20 வெளிநாட்டுத் தலைவர்களும் உலகப் பொருட்காட்சியின் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் கலந்துகொண்டனர். உலகின் பல்வேறு இடங்களின் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். துவக்க விழாவில் பயன்படுத்தப்பட்ட புதிய உயர் அறிவியல் தொழில் நுட்பங்களின் மூலம், எதிர்காலத்தில் அமையவிருக்கும் அருமையான வாழ்க்கையை மக்கள் உணர்ந்துகொண்டனர்.
சீனத் துணைத் தலைமையமைச்சரும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அமைப்புக் குழுவின் தலைமை உறுப்பினருமான வாங்சிசான் துவக்க விழாவில் உரை நிகழ்த்துகையில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், சீனா உலக விருந்தினருக்கு சிறந்த சேவை புரியும் என்று தெரிவித்தார்.
சீனாவின் சிறந்த சேவை மற்றும் உளமார்ந்த புன்னகையுடன், அனைத்து பார்வையாளர்களுக்கும் வெற்றிகரமான தலைசிறந்த மறக்கப்பட முடியாத உலகப் பொருட்காட்சியை வழங்குவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
நடப்பு உலகப் பொருட்காட்சி, பரிமாற்ற மேடை ஒன்றை வழங்கும். இதன் மூலம், மக்கள், எதிர்காலத்தின் வளர்ச்சியில் மேலும் கவனம் செலுத்தி, அறைகூவல்களை சமாளித்து, நெருக்கடியைத் தீர்க்க முயற்சி செய்வார்கள். சர்வதேசக் கண்காட்சி ஆணையத்தின் தலைவர் லென்பாஃங் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய போது, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மீதான எதிர்பாப்பையும் நல்வாழ்த்தையும் இவ்வாறு தெரிவித்தார்.
சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்கத்தை அறிவித்தார்.
தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் கலைஞர்கள் தலைசிறந்த கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். ஹுவாங்பூஃ ஆற்றின் இரு கரைகளிலும் பிரம்மாணடமான விளக்கு ஒளி, நீரூற்று மற்றும் வாணவேடிக்கை அரங்கேற்றங்கள் நடைபெற்றன. அடுத்த ஆறு திங்கள் அதாவது அரையாண்டு காலம், சுமார் 7 கோடி பயணிகள் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைப் பார்த்து இரசிக்க வருகை தருவர் என்று மதிபிடப்பட்டுள்ளது. அவர்கள், உலகளவில் பல்வகை பண்பாடு மற்றும் பல்வேறு நாடுகளின் தனிச்சிறப்பியல்புகளைக் கொண்ட அரங்குகளைப் பார்வையிடும் போது, சுமார் 20 ஆயிரம் கலைநிகழ்ச்சி அரங்கேற்றங்களைக் கண்டுகளிக்கலாம்.