20 நாடுகள் குழுவின் 4வது உச்சி மாநாடு 2 நாட்களாக நடைபெற்று, 27ம் நாளன்று கனடாவின் டோரன்டோ நகரில் நிறைவடைந்தது. 20 நாடுகள் குழுவின் டோரன்டோ உச்சி மாநாடு அறிக்கை ஒன்று, இதில் வெளியிடப்பட்டது.
உலகப் பொருளாதாரத்தின் பன்முக மறுமலர்ச்சியை முன்னேற்றும் வகையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, இதில் கலந்து கொண்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
மறுமலர்ச்சி மற்றும் புதிய துவக்கம் பற்றி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அதில் விவாதித்தனர். உலகப் பொருளாதாரத்தின் நிலைமை, ஐரோப்பிய அரசு கடன் நெருக்கடி, சர்வதேச நாணய நிறுவனங்களின் சீர்த்திருத்தம், சர்வதேச வர்த்தகம், நாணயக் கண்காணிப்பு முதலிய அம்சங்கள் இவ்வுச்சி மாநாட்டின் விவாதக் கருத்துக்களாக இடம்பெற்றன.
பொருளாதார மீட்சியை முன்னேற்றி, எதிர்கால நிதானமான வளர்ச்சிக்கு உறுதியான அடிப்படையிடுவது, இக்குழுவுக்கு அவசியம். எனவே, தற்போதைய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, குறிப்பாக நுகர்வுத் துறையில் இத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.