

பின்னர், பட்டுப்புழுக் கூட்டிலிருந்து பட்டுத் துணி தயார் செய்யப்படும் முறை மற்றும் சிப்பியிலிருந்து முத்தைப் பிரித்தெடுத்து, முத்து மாலை உருவாக்கப்படும் முறை ஆகியவற்றை கண்டுகளித்துவிட்டு, 2008 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற பறவைக் கூடு உள்ளிட்ட விளையாட்டு மையங்கள் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றோம். அங்கே ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர். மகிழ்வுடன் சிறிது நேரம் கழித்தபின், தேசிய விளையாட்டு மையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மையம் ஒன்றில், சீன முறைப்படி எங்களுக்கு மசாஜ் செய்யப்பட்டது. கைகளைப் பார்த்து, திபெத்திய மருத்துவர் ஒருவர் எங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். மசாஜ் செய்யப்பட்டதன் மூலம், பெருஞ்சுவரில் ஏறியதால் ஏற்பட்ட உடல்வலி சற்றே குறைந்தது.
இன்று முழுதும், நீண்ட நேரம் நடந்து, பல இடங்களைப் பார்த்ததால் எங்களுக்கு ஏற்பட்ட களைப்பு, திரு.தமிழன்பன் தம்பதியினர் வழங்கிய இரவு விருந்து மற்றும் நல்ல உபசரிப்பு மூலம் முற்றாக நீங்கியது.
நன்றி நேயர்களே..
பெய்ஜிங்கிலிருந்து என்.பாலகுமார், எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன்.