ஜுலைத் திங்கள் 3 ஆம் எங்களின் சீனப் பயணத்தின் 14-வது நாளாகும். இன்று காலையில் மூவரும் பெய்ஜிங் சாலைகளில் சிறிது நேரம் நடந்து மகிழ்ந்தோம். பின்னர், நண்பர் கலைமணியுடன் இணைந்து பெய்ஜிங் மேற்கு தொடர்வண்டி நிலையத்திலிருந்து, 710 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு சீனாவில் அமைந்திருக்கும் சான்ஷி மாநிலத்தின் தலைநகரும், அம்மாநிலத்தின் பெரிய நகருமான தாய்யுவான் சென்றடைந்தோம். அப்பகுதி, கடல்மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரத்தில் இருந்ததால் காலநிலை நன்றாக இருந்தது. பின்னர், அங்கிருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலா நகரான பிங்யாவ் நகரை பேருந்து மூலம் சென்றடைந்தோம். அங்கிருந்து மின்சார வண்டியில் புறப்பட்டு
முழுதும் கோட்டைச் சுவரால் வளைக்கப்பட்டுள்ள பண்டைக்கால நகரினுள் நுழைந்து 100 ஆண்டுக்கால வரலாறு உடைய யு பெங் ஹாங் என்னும் விடுதியில் தங்கினோம். சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின், இரவு வேளையில் பண்டைய வீதிகளில் நடந்து பல்வேறு வடிவிலான கடைகளையும், அங்கே விற்பனை செய்யப்படும் தனிச்சிறப்புமிக்க உற்பத்திப் பொருட்களையும் கண்டு மகிழ்ந்தோம். பிங்யாவின் இரவுக் காட்சி மிகவும் நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம், பல்வேறு முக்கிய வீதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு விடுதி திரும்பினோம்.