மலர்விழி எங்களை சந்தித்தபோது
கலைமணியின் வீட்டில்
கலைமகள் அளித்த விருந்தின்போது
ஜுலைத் திங்கள் 6 ஆம் நாள், எங்களுடைய சீனப் பயணத்தின் 17வது நாளாகும். நாள்தோறும் தொடர்ந்து மேற்கொண்ட பயணத்தினால், இன்று சற்றே ஓய்வெடுக்க விரும்பினோம். எனவே, காட்சியிடங்களுக்கு இன்று செல்லவில்லை. காலையில், கிளிட்டஸ் வீட்டிற்கு வந்த சுந்தரன், எங்களுடன் கொஞ்ச நேரம் உரையாடிவிட்டுச் சென்றார். சற்று நேரம் கழித்து, மூத்த பணியாளர் மலர்விழி அம்மையார் நாங்கள் தங்கியிருந்த இடம் வந்து எங்களை அன்புடன் நலம் விசாரித்தார். பின்னர், நண்பர் கலைமணியுடன் அவருடைய காரில் புறப்பட்டு, சில அங்காடிகளுக்குச் சென்றோம். தமிழ்ப்பிரிவின் துணைத்தலைவர் கலைமகள் அவர்கள், தைவான் உணவு வகைகளுக்கு புகழ்பெற்ற டிராகன் உணவு விடுதியில் எங்களுக்கு மதிய விருந்து அளித்தார். இவ்விருந்தில், தமிழ்ப்பிரிவுத் தலைவர் தி.கலையரசி, முன்னாள் தலைவர் எஸ்.சுந்தரன், சிறப்பு நிபுணர்கள் கிளிட்டஸ், தமிழன்பன், தமிழன்பன் துணைவியார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அவ்விருந்தில், சில சிறப்பு உணவு வகைகளை சுவைபார்த்து மகிழ்ந்தோம். இன்று என்.பாலக்குமாரின் பிறந்த நாளாகும். அதை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கலைமகள் அவர்கள், நீண்ட ஆயுளுக்காக சிறப்பு உணவு ஒன்றை வழங்கினார். தொடர்ந்து சில அங்காடிகளைச் சென்று பார்வையிட்டோம். பின்னர், மாலை கலைமணியின் வீட்டிற்குச் சென்றோம். கலைமணியின் துணைவியார் எங்களை அன்புடன் உபசரித்தார். அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அழகான நிழற்படத் தொகுப்பைக் கண்டுகளித்துவிட்டு, கிளிட்டஸ் வீடு திரும்பினோம். எங்களுக்காக இரவு விருந்தை ஒன்றை சிறப்பான முறையில் தயார் செய்து கிளிட்டஸ் வழங்கினார். இவ்விருந்தில், தமிழன்பன் தம்பதியினர் கலந்து கொண்டனர். சீனப் பயணம் தொடர்பான மேலதிக விவரங்களுக்கும், நிழற்படங்களுக்கும் சீன வானொலி தமிழ்ப்பிரிவு இணையத்தை பார்வையிடுங்கள்.பெய்ஜிங்கிலிருந்து எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன் மற்றும் என்.பாலக்குமார்.