சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக்குழு நகரங்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளின் மீது கவனம் செலுத்தும் நடவடிக்கை
2010ஆம் ஆண்டு மே திங்கள், நகரங்களுக்குச் சென்று வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் தன்னார்வத் தொண்டர் சேவை நடவடிக்கையைச் சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக்குழு செயல்படுத்தத் தொடங்கியது. நாடு முழுமையிலும்,மாணவர்களுக்குப் படிப்பில் உதவுவது, குழந்தைகளுடன் செல்வது, நகரத்தை உணர்வது, தற்பாதுகாப்புக் கல்வி, அன்பு மீட்புதவிப் பணி முதலிய பணிகளைச் செய்வதற்கு இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் இந்நடவடிக்கையில் அணிதிரட்டப்பட்டுள்ளனர். இவையாவும் விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பயனுள்ள உதவிகளை வழங்குகின்றன.
பல்கலைக்கழக மாணவர்கள் மேற்குப் பகுதிக்குத் தன்னார்வச் சேவைபுரியும் திட்டம்
ஆண்டுதோறும், வெளிப்படையாக ஆள் சேர்ப்பது, சொந்த விருப்பத்துடன் பெயரைப் பதிவு செய்வது முதலிய வழிமுறைகளின் படி, இத்திட்டம், குறிப்பிட்ட அளவு உயர் கல்வி நிலையங்களின் பட்டதாரிகளைச் சேர்த்து, அவர்களை மேற்குப் பகுதியின் அடி மட்ட நிலையிலுள்ள இடங்களுக்கு அனுப்பி 1 முதல் 3 ஆண்டு வரையான தன்னார்வச் சேவைப் பணிகளில் ஈடுபடச் செய்கிறது. 2003ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 8 ஆண்டுகளில், நடுவண் அரசு மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் நிதி உதவியின் ஆதரவால், ஆயிரத்துக்கு மேலான உயர் கல்வி நிலையங்களின் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள், நாடு தழுவிய திட்டப்பணிகள் மற்றும் உள்ளூரின் திட்டப்பணிகளில் தன்னார்வச் சேவை புரிய பெயர் பதிவு செய்துள்ளனர். நடைமுறையில் சேவை புரிய அனுப்பப்பட்ட தொணடர்களின் எண்ணிக்கை லட்சத்துக்கு அதிகமாகும்.
சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்களின் வெளிநாட்டுச் சேவை திட்டம்
2002ஆம் ஆண்டு மே திங்கள், சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக் குழுவும், சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர் சங்கமும் வெளிநாட்டுச் சேவை திட்டத்தை நடைமுறைப்படுத்தி, லாவோஸ் நாட்டுக்கு 5 இளைஞர் தன்னார்வத் தொண்டர்களை அனுப்பியது. சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர் லட்சியத்தின் புதிய அட்டியாயத்தை இது திறந்து வைத்தது. சீன மொழியைக் கற்பிப்பது, மருத்துவச் சேவை, வேளாண் தொழில் நுட்பம், கணினி பயிற்சி, சர்வதேச மீட்புதவி முதலியவற்றில் 491 சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் லாவோஸ், ]மியன்மார், எத்தியோபியா, ஜிம்பாப்வே முதலிய வளரும் நாடுகளுக்கு சேவை புரிந்துள்ளனர்.
மாபெரும் போட்டிகளுக்கும், கூட்டங்களுக்குமான தன்னார்வச் சேவை
கடந்த சில ஆண்டுகளில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, குவாங்துங் ஆசிய விளையாட்டுப் போட்டி, நாட்டின் 60வது ஆண்டு நிறைவு விழா முதலிய மாபெரும் கொண்டாட்ட நடவடிக்கைகளில் இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் பெரும் ஊக்கத்துடன் கலந்துகொண்டுள்ளனர். 17 லட்சத்துக்கு மேலானோர், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தன்னார்வச் சேவையில் ஈடுபட்டனர். மாபெரும் சர்வதேச போட்டிகள்,கூட்டங்களில் அவர்கள் நடைமுறைப்படுத்தும் தனிச்சிறப்பு மற்றும் உயர் தரமான வழிமுறை வெற்றிகரமாக ஆராயப்பட்டுள்ளது.