அன்புள்ள நேயர் நண்பர்களே, புத்தாண்டு மணி ஒலித்திருக்கின்ற போது, முதலில் அனைத்து நேயர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த ஓராண்டில் எங்களுக்கு உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்கிய அனைத்து நேயர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
2011ம் ஆண்டு, சீன வானொலியைப் பொறுத்த வரை முக்கியமான ஆண்டாகும். 70 ஆண்டுக்கு முன், சீன வானொலி முதல் முறையாக ஒலிபரப்பத் தொடங்கியது. 70 ஆண்டுகாலத்தின் வளர்ச்சி மூலம், சீன வானொலி நிலையம் 61 மொழிகளில் உலகளவில் ஒலிபரப்பும் மாபெரும் செய்தி ஊடாகமாக மாறியுள்ளது. 70வது ஆண்டு நிறைவுக்காக சீன வானொலி கொண்டாட்ட நடவடிக்கைகள் பலவற்றை நடத்தியது. தமிழ்ப்பிரிவின் முன்னாள் நிபுணர் முனைவர் என்.கடிகாசலம், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் பிரதிநிதி உத்திரக்குடி சு.கலைவாணன் ராதிகா ஆகியோர், எமது அழைப்பை ஏற்று, கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். பிறகு பாண்டிசேரியில் நடைபெற்ற அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 23வது கருத்தரங்கில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டு நேயர்களுடன் தங்களது சுவையான சீனப்பயணத்தை பற்றி பகிர்ந்துகொண்டனர். கடந்த ஆண்டில், புகழ்பெற்ற கவிஞர் தாகூரின் 150வது பிறந்த நாள் நினைவு, சீன வானொலி நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவு ஆகியவை பற்றி, இரண்டு பொது அறிவுப்போட்டிகளை முறையே தமிழ்ப்பிரிவும், சீன வானொலியும் நடத்தின. அவற்றில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, அதிகமான வினாத்தாள்களை சேகரித்து அனுப்பிய நேயர்களுக்கும் நேயர் மன்றத் தலைவர்களுக்கும் மிக்க நன்றி. மேலும், கடந்த ஓராண்டில் அடிக்கடி கடிதம் எழுதி, கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் தெரிவித்த நேயர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். 2012ம் ஆண்டில் தமிழ்ப்பிரிவு தொடர்ந்து இணையதளத்தில் புதிய பொது அறிவுப்போட்டியை நடத்தவுள்ளது. அதில் உங்களின் பங்கேற்பை வரவேற்கின்றோம்.
கடந்த ஆண்டின் ஆகஸ்டு திங்களில் நான் தமிழ்ப்பிரிவின் தலைவராக பதவியேற்றேன். எதிர்காலத்தில் தமிழ்ப்பிரிவின் வளர்ச்சிக்கு மேலதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. சீன வானொலியின் வளர்ச்சியுடன், இணையதளம், பண்பலை ஒலிபரப்பு, செல்லிடபேசி செய்தி ஊடகம் முதலியவை, படிப்படியாக பல்லூடகங்களாக புதிய ஒலிபரப்பு வழிமுறைகளாக வளர்கின்றன. இந்த முன்னேற்றப் போக்கிற்கு ஏற்ப மேம்படும் வகையில், 2012ம் ஆண்டில் தமிழ்ப்பிரிவின் அனைத்து பணியாளர்களுடன் இணைந்து புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, இணையதளத்தில் சீனாவில் தங்கியிருக்கும் தமிழர்களின் வாழ்வு பற்றிய ஒளிப்படங்கள் புதிதாக சேர்க்கப்படும்.
இவ்வாண்டிலும் நான் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தயாரித்து ஒலிபரப்புவேன். நேயர்களின் கருத்துகளையும் முன்மொழிவுகளையும் ஆவலாக எதிர்ப்பார்க்கின்றோம். அன்பான நேயர் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்ுக்கொள்கின்றேன்.
புதிதாக பிறக்கும் ஆண்டில் தமிழ்ப்பிரிவு மேலதிக சாதனைகளைப் பெறுவது என் அளவில்லா ஆசை தான். கூட்டாக முயற்சிகளை மேற்கொள்வோம். மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.