தொடக்கத்தில், பிரிக்ஸ் நாடுகள் என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளாகும். ஆங்கில மொழியில் இந்நான்கு நாடுகளின் முதல் எழுத்துக்களால் உருவாகிய சொல் BRIC, செங்கல்லைக் குறிக்கும் ஆங்கில மொழி சொல்லைப் போல இருந்ததால், அது சீன மொழியில் சின்சூவேன்சிகோ என அழைக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா அதில் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாகச் சேர்வதை 2010ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பிரிக்ஸ் நாடுகள் கலந்தாய்வு செய்த பின்னர், ஒருமனதாக ஒப்புக்கொண்டன.
பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் புதிதாக வளர்ந்து வரும் சந்தை நாடுகளாகும். இதனால், சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் பலவற்றிலும் அவை கருத்தொற்றுமை கொண்டவையாக விளங்குகின்றன. கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்திச் சர்வதேசப் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சித் துறையிலான பல முக்கிய பிரச்சினைகளைப் பற்றி பிரிக்ஸ் நாடுகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகின்றது.
2009ஆம் ஆண்டு சூன் திங்கள், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் முதல் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை ரஷியாவில் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள், சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் தலைவர்கள் சீனாவின் ஹைநான் மாநிலத்தின் சான்யா நகரில் தமது 3வது பேச்சுவார்த்தையை நடத்தினர். அதற்குப் பின்பு நிறைவேற்றப்பட்ட சான்யா அறிக்கை, முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளிலும் இந்த ஐந்து நாடுகளின் பொது கருத்துக்களை வெளிக்காட்டுகின்றது.
அடுத்த பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் பேச்சுவார்த்தையை இந்தியா 2012ஆம் ஆண்டு பொறுப்பேற்று நடத்தும் என்று இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்•சிங் அப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட போது அறிவித்தார்.