© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் பெய்ஜிங்கிலிருந்து உலகப் பொருளாதார மன்றத்தின் 2022ஆம் ஆண்டு காணொளி கூட்டத்தில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். புத்தாண்டில் முதலாவது பலதரப்பு தூதாண்மை நிகழ்வில், ஷிச்சின்பிங் வரலாற்றுப் போக்கிலிருந்து தொடங்கி, தற்போதைய உலக அறைகூவல்களைச் சமாளிப்பதற்கு 4 முன்மொழிவுகளையும் 3 நடவடிக்கைகளையும் முன்வைத்து, உலக ஒத்துழைப்பை சீனா முன்னேற்றும் மன உறுதி மற்றும் முயற்சியை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளார்.
நடப்புக் கூட்டத்தில், சீனர்கள் வரலாற்றிலிருந்து பெற்ற அனுபவங்களை ஷிச்சின்பிங் பகிர்ந்து கொண்டு, வரலாற்று முன்னேற்றத்தின் தர்க்கத்தில் முன்னேறவும் யுகத்தின் வளர்ச்சி ஓட்டத்தில் வளரவும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஒரு பெரிய நாட்டின் தலைவரான அவரது நெடுநோக்கு பார்வை மற்றும் வரலாற்றுப் பொறுப்பை இது வெளிக்காட்டுகிறது.
ஒத்துழைப்பு மூலம் தொற்று நோயை வென்றெடுப்பது, பல்வகை இடர்பாடுகளை நீக்கி உலகப் பொருளாதார மீட்சியை மேம்படுத்துவது, வளர்ச்சி இடைவெளியைக் குறைத்து உலகளாவிய வளர்ச்சியை மீட்டெடுப்பது, பனிப்போர் சிந்தனையைக் கைவிட்டு அமைதியான சகவாழ்வு மற்றும் கூட்டு வெற்றியை நனவாக்குவது ஆகியவை ஷிச்சின்பிங் முன்வைத்த 4 முன்மொழிவுகளாகும். இவை, தற்போதைய உலகச் சமூகம் இக்கட்டான நிலையிலிருந்து விடுபடுவதற்கு வழிகாட்டியுள்ளன.
தொற்று நோய் தடுப்பை எடுத்துக்காட்டாகக் கொண்டால், உலகிற்கு உதவும் மனப்பான்மையும் செயல்பாடும் சீனாவுக்கு உண்டு. தடுப்பூசி தேசிய வாதத்தைப் பின்பற்றும் மேலை நாடுகளுக்கு மாறாக, சீனா உலகிற்கு 200 கோடி டோஸ்க்கு மேலான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
மேலும், ஷிச்சின்பிங் உரை நிகழ்த்திய அதேநாளில், 2021ஆம் ஆண்டிற்கான சீனப் பொருளாதாரச் சாதனை வெளியிடப்பட்டது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்கு விகிதம் சுமார் 25 விழுக்காடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்தர வளர்ச்சி, சீர்திருத்தம் மற்றும் திறப்பு, இயற்கைச் சூழல் நாகரிகம் ஆகியவற்றை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்லும் சீனா, உலக வளர்ச்சிக்கு வழிகாட்டி ஆதரவளிக்கும் ஆற்றலாகும் என்று ஷிச்சின்பிங்கின் உரையிலிருந்து உணரப்பட முடிகிறது.