சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி, பண்பாட்டுக் கட்டுமானத்தை வலுப்படுத்தி, ஊழல் எதிர்ப்புப் பணியை வலுப்படுத்தி, மக்கள் நாட்டின் உரிமையாளர் என்ற ஜனநாயக உரிமையை பயனுள்ளதாக உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று வென்சியாபாவ் அரசுப் பணியறிக்கை வழங்கிய போது தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஊழல் எதிர்ப்புப் பணியை, முக்கிய தகுநிலையில் வைத்து, கண்காணிப்பு மற்றும் தணிக்கை வாரியங்களின் பங்கினை போதியளவில் பயன்படுத்தி, மேலாண்மை அதிகாரத்துக்கான கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். அரசு விவகாரத்தின் வெளிப்படைத் தன்மையை முன்னேற்றி, அரசு மீதான மக்களின் கண்காணிப்புக்கு வாய்ப்பை உருவாக்கி வழங்கி, செய்தி ஊடகங்களின் கண்காணிப்பு வசதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் அரசுப் பணியறிக்கையில், ஹாங்காங், மகெள மற்றும் தைவான் மீதான நடுவண் அரசின் அடிப்படை கொள்கைகளை வென்சியாபாவ் மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு கரை உறவில், பெருநிலப்பகுதியும், தைவானும் ஒரே சீனாவைச் சேர்ந்ததை, பணியறிக்கை உறுதிப்படுத்தியது. இரு கரை உறவு அமைதியாக வளர்ச்சியடையும் அரசியல் அடிப்படையையும், இரு கரைகளிடை அரசியல் நம்பிக்கையையும் அரசு வலுப்படுத்தும். இரு கரை மக்களிடைத் தொடர்பை வலுப்படுத்தி, இரு கரை உறவு அமைதி வளர்ச்சியின் பலன்கள் கூட்டாக அனுபவிக்கப்படும் என்று வென்சியாபாவ் தெரிவித்தார்.
தூதாண்மைப் பணி பற்றி குறிப்பிடுகையில், சீனா, தற்சார்பு அமைதித் தூதாண்மை கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும். ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வளர்ச்சியடையும் திறப்பு உத்திநோக்கைப் பின்பற்றி, நீண்டகால அமைதியும் கூட்டுச் செழுமையும் கொண்ட இணக்க உலகத்தை உருவாக்க, சீனா முயற்சி செய்யும் என்று வென்சியாபாவ் தெரிவித்தார். சீன அரசும் மக்களும், சர்வதேச சமூகத்துடன் இணைந்து, இடர்பாடுகளையும் அறைகூவல்களையும் கூட்டாக சமாளித்து, வளர்ச்சி வாய்ப்புகளை அனுபவித்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டுமென, சீனா விரும்புகிறது என்றும் வென்சியாபாவ் தெரிவித்தார்.
திட்டப்படி, ஒன்பதரை நாட்கள் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகள், அரசுப் பணியறிக்கையை பரிசீலனை செய்து வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொண்டு, 2010ம் ஆண்டின் சீனச் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் போக்கை உறுதிப்படுத்துவார்கள்.