மங்காத தமிழென்று சங்கே முழங்கு
அவையோர் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களே, துணை முதலமைச்சர் அவர்களே, இன்றைய அமர்வின் தலைவர் அவர்களே! இங்கே அமர்ந்திருக்கும் அமைச்சர் பெருமக்களே, அறிஞர்களே, தமிழ் மொழி வல்லுனர்களே, புலவர்களே, சான்றோர்களே, ஆன்றோர்களே, பெரியோர்களே, பொதுமக்களே மற்றும் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த வணக்கம்.
அறிமுகம்
எனது இயற்பெயர் ஜுச்சியென்குவா. தமிழ்ப் பெயர் தி.கலையரசி. சீன வானொலி தமிழ்ப் பிரிவின் முதன்மை அறிவிப்பாளராகவும் தமிழ்ப் பிரிவின் தலைவராகவும் பணிபுரிந்து வருகின்றேன். பணிப்பயணமாக ஏற்கனவே பலமுறை தமிழகம் வந்துள்ளேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தொல்மொழித் தமிழ் மீது பற்றுக்கொண்டு, அதனை எமது நாட்டில் பரவிடச் செய்யும் வற்றாத தாகத்துடன் செயல்பட்டுவரும் எம்மைப் போன்றோரின் பிரதிநிதியாக இதோ உங்கள் முன்னால் நின்றுக் கொண்டிருக்கிறேன். பண்டைக்கால மொழிகளில் தமிழ் மொழியும், சீன மொழியும் இடம்பெற்றுள்ளன என்ற பெருமை உணர்வுடன், சீனாவில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பங்கு பற்றிய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
உரை சுருக்கம்
'சென்றிடுவீர் எட்டுதிக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'
என்றார் மகாகவி பாரதியார். உலகத்திலுள்ள அனைத்துக் கலைச் செல்வங்களின் அடையாளமாக தமிழகம் மாற வேண்டும் என்ற அவரது எண்ணம் போற்றுதற்குரியது. உலகிலுள்ள அனைத்து தத்துவங்களும், கொள்கைளும், பயன்பாடுகளும், செயல்பாடுகளும் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழர்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வதே அவரது எதிர்பார்ப்பாக இருந்தது. அதே வழியில் சீனச் செல்வங்களை தமிழிலும், தமிழ் வளங்களை சீன மொழியிலும் கொண்டு சென்று, தமிழர்கள் மற்றும் சீனர்கள் இடையில் பரிமாற்றத்தை வளர்ப்பதன் மூலம் நம்மிடையே நட்பையும், என்றும் நிலைக்கும் தொடர்பையும் வளரச் செய்வதை எமது தலையாய பணிகளாக எண்ணி ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றோம். அந்நிலையில் எமக்கு கிடைத்துள்ள இந்நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமிழை சீனர்கள் இடையே கொண்டு செல்வதற்கான முயற்சிகள், வழிமுறைகள், அதன் காரணமாக உருவாகியுள்ள தமிழர்கள்- சீனர்களிடையிலான நட்புறவு, சீனாவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அனைத்தையும் சுருக்கமாக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.