சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பெய்ஜிங் தமிழ் சங்கமத்தின் சார்பில், தீபாவளி பண்டிகை தாஜ் லிடோ உணவகத்தில் சனிக்கிழமை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெய்ஜிங் வாழ் தமிழர்கள் இவ்விழாவில் குடும்பத்தோடு பங்கேற்று விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். காலை 11 மணிக்கு வழிபாட்டுடன் தொடங்கிய விழாவில், முதலாவதாக புதிர்ப்போட்டி, நடைபெற்றது. அதனையடுத்து, பெய்ஜிங்கில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்ற திரு. பிரவீன் குமார் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள உயிரினங்கள் பற்றிய காணொலிக் காட்சி ஒன்றை ஒளிபரப்பி அவை பற்றி விளக்கிக் கூறினார். விழாவில் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மதிய உணவிற்குப் பின் நடைபெற்ற பட்டிமன்றம் மக்களைப் பெரிதும் மகிழ்வித்தது. விழாவில், சீன வானொலித் தமிழ்ப்பிரிவின் சார்பில் தமிழ்ப்பிரிவின் தலைவர் கலைமகள், தமிழ்ப்பிரிவின் பணியாளர்கள் திரு. கலைமணி, திரு. சக்திவேல், திரு. பண்டரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.