அன்று எமது செய்தியாளர்கள் ச்செங் யாங் துங் இன கிராமம் சென்றடைந்ததும், கறுப்பு நிற துங் இன ஆடைகளை அணியும் ஆண்கள் பட்டாசுகளை வெடித்து தொலைவிலிருந்து வந்த விருந்தினரை வரவேற்றனர். பெண்கள், நீல நிற மேல்சட்டையும் கறுப்பு நிற குட்டை பாவாடையும், தலையில் வெள்ளி அலங்காரமும் அணிந்து, நாட்டுப்புற பாடல் பாடிக்கொண்டே, செய்தியாளர்களுக்கு மதுபானம் வழங்கினர். வாசலில் நுழையாமல் தடை செய்யப் பயன்படும் மதுபானம் என, இது கூறப்படுகின்றது. எனவே, விருந்தினர்கள் ஒரே வாயில் குடித்து முடிக்க வேண்டும். பின்னர் பச்சை இலைகளுடைய மரத் துண்டுகளை கொண்டு உடம்பிலுள்ள தூசியை துடைத்த பின்னரே கிராமத்திற்குள் செல்லமுடியும்.
பாடல்பாடும் பெண்ணுக்கு யாங் யே லீ என்ற பெயர். துங் இனம் பாட விரும்பும் தேசிய இனம். இனத்தவர்கள் சிறு வயதிலிருந்தே பாட கற்றுக் கொள்வதால், இனிய குரலில் பாட முடியும்.
"எங்கள் பாட்டுகளெல்லாம், தாயும் தந்தையும் சொல்லிக்கொடுத்தவை. துங் இனத்தவர்களான நாங்கள், பாட விரும்புகின்றோம். இளம் வயதிலிருந்தே பாடக் கற்றுக்கொள்ளத் துவங்கினோம். பின்னர் கிராமத்தில் அரங்கேற்ற அணி அமைக்கப்பட்டது. பாட்டுகள் மேன்மேலும் அதிகமாகி வருகின்றன. மதுபானத்தைக் கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் பாடல், காதல் பாடல் முதலியவற்றைப் பாடக் கற்றுக் கொண்டேன்" என்றார்.
எமது செய்தியாளர்கள், துங் இன கிராமத்தில் நுழைந்த உடனே, இளைஞர்கள் பலர், லு சியிங் (Lu Sheng)எனும் ஒருவகை இசைக்கருவியை ஊதி, மங்கையர்கள் கைகளில் பூக்கள் அச்சுடிக்கப்பட்ட கூடைகளை ஏந்திய வண்ணம், ஆடிக்கொண்டே வரவேற்று, கிராமத்தின் மையப் பகுதியிலுள்ள சதுக்கத்தில் எங்களை அழைத்துச் சென்றனர். துங் இனவாசிகள் "நூறு குடும்ப விருந்து" நடத்தும் இடம், இதுவாகும்.