ndhl.mp4
|
இயற்கையுடன் இயைந்து வாழ்வதற்காக நகரவாசிகள் எப்போதாவது கிராமத்துக்குச் செல்வதுண்டு. அப்படி ஒரு பயணத்தை சீனர்கள் மேற்கொண்டால், சரிவான பாதையை நோக்கி நீர் ஓடுவது போல, மலைச் சரிவில் அமைந்துள்ள ஹுவங் லிங் கிராமத்தை நோக்கத்தான் மக்கள் எத்தனிப்பர். சீனாவில் எத்தனையோ மலைகளில் கிராமங்கள் இருந்து வந்தாலும், ஹுவங் லிங் கிராமம் (ஜியங்சி மாநிலம், வூயுவான் வட்டம்), தனி இடத்தைப் பிடித்து தன்னிகறற்று விளங்குகிறது. கிராமத்தின் நில அமைவு மற்றும் கிராமத்தினுடைய தலைவிதியை மாற்றி எழுதியே தீர வேண்டும் என்ற மக்களின் வேட்கைதான் அதற்குக் காரணமாகும்.
நான் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதலில், பார்த்து வந்த அலுவலகப் பணியை விட்டு விலகி, கிராமத்தின் வளர்ச்சிக்காக கடந்த 18 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன் என்று வூயுவான் வட்டத்தின் தலைவர் வூ சியங் யங் தெரிவிக்கிறார். தலைவர் முதல் கடைசி கிராமவாசி வரை, தங்களின் மண்ணை வெளி உலகத்தவர்களின் பாதங்கள் முத்தமிட்டே தீர வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
நகரத்தை நோக்கி இளைஞர்கள் எல்லாம் செல்கின்றனரே. அவர்களை இக்கிராமத்தில் இருத்துவதற்கு எது ஆதாரம் என்று பார்த்தபோது, சுற்றுலா என்ற வார்த்தை அவர்களது எண்ணத்தில் உதித்துள்ளது. அந்த எண்ணமே, கருத்தரித்து தற்போது முழு உருப்பெற்று நன்கு வளர்ச்சி அடைந்தும் வருகிறது. அதற்கு சிறு எடுத்துக்காட்டு, 2 மலைகளைத் தாண்டி, ஹுவங்லிங் கிராமத்துக்குச் செல்லும் ரோப் கார் வசதியே.