பெய்ஜிங்லிருந்து ஷாங்ஹாய் புல்லட் டிரெயினில் மணிக்கு 320 கிலோமீட்டரில் வேகத்தில் 5 மணிநேர பயணம்… சீனாவின் புகழ் வாய்ந்த முக்கிய நகரங்களில் ஷாங்காயும் ஒன்று. சீனாவின் வணிக தலைநகரம் என்று கூட கூறலாம். முதல் முறை செல்வதால் எங்களுக்குள் ஒரு ஆவல் மற்றும் பதட்டமும் கூட. புல்லட் டிரெயின் பயணம் மிக அருமையாக இருந்த்து. அவ்வளவு வேகமாக செல்கிறது என்று டிரெயினில் இறுக்கும் டிஜிடல் போர்ட் பார்த்து தான் தெரிந்துக்கொண்டோம். கோப்பை நிறய காபி அல்லது டீ இருந்தாலும் ஒரு துளி கூட சிந்தவில்லை. இன்னொரு முக்கிமான சௌகர்யம் என்னவென்றால் இந்த அதிவேக ரயில் வண்டியில் மொபைல் ஃபோன் உபயோகிக்கலாம். விமானத்தில் தான் ஃபோனை ச்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். ஒரு சிறு களைப்பும் இல்லாமல் ஷாங்ஹாய் வந்து சேர்ந்தோம்.
பொதுவாக ரயில் நிலயங்கள் போல் இருக்கும் என்று இறங்கிய எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இது என்ன ரயில் நிலயமா அல்லது தவறிபோய் விமான நிலையம் வந்து விட்டோமா என்று எண்ண தோன்றியது. அவ்வளவு சுத்தம் மற்றும் நவீனமாக இருந்தது. டாக்சியை பிடித்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம். முன்னேற்பாடாக ஹோட்டலின் விலாசத்தை சீன மொழியில் செல் ஃபோனில் பதிவு செய்து வைத்திருந்தோம். நாங்கள் ஷாங்ஹாய் வந்தது மாலை நேரம். மாலை மற்றும் இரவு ஷாங்ஹாய் கொள்ளை அழகு. ஒரு நல்ல 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம்.
ஷாங்ஹாயில் என்ன பார்பது என்று ஒரு சின்ன பட்டியல் போட்டிருந்தோம்; கிட்டதட்ட இதில் உள்ள எல்லா இடங்களையும் பார்க்க துவங்கினோம். முதலில் ஷாங்காய் மியூசியம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் ஓரியண்டல் பியர்ள் டவர் என்கிற ஆயிரத்தி ஐந்நூற்றி முப்பத்தைந்து அடி உயரமுள்ள கோபுரம். இந்த கட்டிடம் ஹாங்ஃபூ நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 1991ம் ஆண்டு கட்டத் துவங்கி 1995ல் முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே முதல் பெரிய கோபுரமாகவும், உலகில் மூன்றாவது இடத்திலும் இருந்தது. கண்ணாடித் தரையுடன் கூடிய அறையிலிருந்து நிலப்பகுதியை பார்க்கும்பொழுது ஆஹா என்ன ஒரு அழகு என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. கீழ்த்தளம் 863 அடி உயரத்திலும், மிக உயர்ந்த தளம் 1148 அடி உயரத்திலும் இருக்கிறது.