பூர்ச்ச மரப்பட்டையைக் கொண்டு கைவினைப் பொருட்களைத் தயாரிப்பது, சீனாவின் எலுன்ச்சுன் இனத்தின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்றாகும். ஆனால், உற்பத்தி மற்றும் வாழ்க்கை முறையின் மாற்றத்துடன் இத்தகைய நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தவர்களின் எண்ணிக்கை மென்மேலும் குறைந்து வருகின்றது. அண்மையில், எமது செய்தியாளர் வடக்கு சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் டொசாமி வட்டத்துக்குச் சென்று அங்குள்ள எலுன்ச்சுன் இனத்தவர்கள், சிலர் பூர்ச்சமரப்பட்டையைக் கொண்டு கைவினைப் பொருட்களாகத் தயாரிக்கும் நுட்பத்தைக் காப்பாற்றும் ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பதை கண்டறிந்தார். இப்போது இவ்வட்டத்துக்குச் சென்று அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை காண்போம்.
டொசாமி வட்டம், எலுன்ச்சுன் இனத்தவர்கள் கூடிவாழும் ஒரு இடம். சுற்றுப்புறங்களிலும் மலைகள் சூழ, டொசாமி வட்டம் சமவெளியில் அமைந்துள்ளது. அதிகாலையில் இவ்வட்டத்தின் பெரும் மண்டபம் ஒன்றிலிருந்து, பாடம் சொல்லிக் கொடுக்கும் குரல் கேட்டது. கண்விழித்து பார்க்கும் போது, 60 வயதுக்கு மேற்பட்ட முதிய பெண்மணி ஒருவர் கிராமத்திலுள்ள இளம் பெண்களுக்கு இந்த கைவினை பொருட்களைத் தயாரிக்கும் நுட்பத்தை சொல்லிக் கொடுக்கின்றார்.
இம்முதியவரின் பெயர், அஜிலங். அவர் டொசாமி வட்டத்தில் புகழ் பெற்ற கைவினைஞர் ஆவார். பாடம் முடிந்த பிறகு செய்தியாளர் அவருடன் அவரது வீட்டிற்கு சென்றார். பெட்டிகள், சிறு பீப்பாய்கள் உட்பட, அவரது வீட்டில் பூர்ச்ச மரப்பட்டையால் செய்யப்பட்ட பல்வகை கைவினைப் பொருட்கள் நிறைய காணப்படுகின்றன. அன்றி, கற்பனை சிந்தனை மூலம் உருவாக்கப்பட்ட அலங்காரத்துக்குப் பயன்படும் சிறு கப்பல்களும் சிசுத் தொட்டில்களும் இருக்கின்றன. இக்கைவினைப் பொருட்களில் சில மரத்தின் இயல்பான நிறத்தில் உருவாக்கப்பட்டன. வேறு சில, சாயம் பூசப்பட்டவை. முதியோரின் சமையல் அறையோ, பூர்ச்சமரப்பட்டைக் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கும் களரியாக மாறியது. பதனிடப்படாத பூர்ச்ச மரப்பட்டைகள் இங்கு குவிந்து கிடக்கின்றன.