வட மேற்கு சீனாவின் சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், பல தேசிய இனங்கள் கூடிவாழும் வட்டாரமாகும். இவ்வினத்தவர்கள் ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவர்கள். உஸ்பெக் இனம், சிங்கியாங்கின் தேசிய இனங்களில் ஒன்றாகும். உஸ்பெக் இனத்தில் தலைசிறந்த பாடகர்கள் பலர் அங்கு காணப்படுகின்றனர். அவர்களில் ஒருவரான உச்ச குரல் இசை பாடகர் சமிலி சக்ர் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். இனிமையாகப் பாடுவது தவிர, நற்பணிகளிலும் அவர் உற்சாகமாக பங்கெடுத்துள்ளார். எனவே, அவர், மக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கலைஞர், பொது நலன் தூதர் என்று போற்றப்படுகிறார்.
சமிலி, 1958ம் ஆண்டு சிங்கியாங்கின் ச்சி தெய் (Qi Tai) மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, உஸ்பெக் இனத்தவர். தாய், உய்கூர் இனத்தவர். 6 பிள்ளைகளில் அவர் நான்காவது பிள்ளையாவார். ஆடல் பாடலில் தேர்ச்சியுடைய இக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், குழந்தைப் பருவத்திலிருந்தே பாடவும் ஆடவும் விரும்பினார். 5 வயதான போது, மாவட்டத்தில் நடந்த கலை அரங்கேற்றத்தில் அவரை அவரது தந்தை அரங்கேறச் செய்தார். இசை ஒலியைக் கேட்டதுமே, அவர் ஆடிபாடி அடுத்தடுத்து மூன்று நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்.
சமிலி வளர்ந்த பின், படையில் சேர்ந்து, எல்லைக் காவல் படைவீரராக மாறினார். பாடலை நேசிக்கும் அவர், ஓய்வு நேர கலை ஆசிரியராக பணியாற்றினார். விடுமுறை நாட்களிலும் விழாக்களிலும், படைவீரர்களுடன் சேர்ந்து இசை இசைத்து பாடுவார். அவரது படை வாழ்க்கை, அவர் ராணுவ முகாம் பாடலை இயற்றும் பேர் ஆர்வத்தை தூண்டி விட்டது. பகலில் பயிற்சி மிகவும் மும்முரமானது, எனவே, இரவில் அவர் அயராது பாடல்களை இயற்றினார்.
இது வரை "நான் படைப்பிரிவிலுள்ள பாடகர்" "டாபங் நகரக்கதை" உள்ளிட்ட சுமார் 200 பாடல்களை அவர் இயற்றி பாடியுள்ளார். அவரது பாடல் தொகுதிகள் சீன ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது மட்டுமல்ல, ஜப்பான், சிங்கப்பூர் முதலிய நாடுகளின் ரசிகர்களாலும் வரவேற்கப்படுகின்றன.