மூன்றாவது திங்கள் மூன்றாம் நாளன்று, சான் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களின் துங் இன இசைக்குழுக்கள், ஃபு லு வட்டத்தின் முரசுக் கோயிலின் முன்னாள் திரண்டு மகிழ்ந்தனர். இந்த இசைக்குழுவினர் பாடிய பல இனிமையான துங் இனப் பாடல்கள், பயணிகளின் ஆரவாரப் பாராட்டுகளை வென்றன. கொண்டாட்ட நடவடிக்கையின் இறுதியில், விருந்தோம்பல் மிக்க துங் இன மங்கையர், சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுடன் ஒன்றாக சேர்ந்தே, நாட்டுப்புறப் பாடல்களின் தாளத்துடன், மிகுந்த உற்சாகத்தில் தீயை சுற்றி நடனம் ஆடினர். கோலாகலமான சூழ்நிலையில், பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
சான் சியாங் மாவட்டத்தின் சுற்றுலா அலுவலகத்தின் துணைத் தலைவர் லியாங் ச்சுயே ச்செங் அறிமுகப்படுத்தியபடி, கடந்த சில ஆண்டுகளில், ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மேலதிக பயணிகள் சான் சியாங் மாவட்டத்துக்கு வருகை தருகின்றனர். இது, உள்ளூர் சுற்றுலா துறை வளர்ந்து வரும் புதிய தனிச்சிறப்பாக மாறியுள்ளது. ஆசியான் நாடுகளின் சந்தை, சான் சியாங் சுற்றுலா அலுவலகத்தின் வெளிநாட்டுப் பரப்புரை நடவடிக்கையின் முதன்மை இடமாகும். அவர் கூறியதாவது:
"ஆண்டுதோறும் மூன்றாவது திங்கள் மூன்றாம் நாளான இந்த விழா, ஏராளமான வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கின்றது. பயணிகளில் அதிகமானோர், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இவ்வாண்டு, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அதிகரித்துள்ளனர். புவியியல் அமைப்பின் மேம்பாடு காரணமாக, இந்நாடுகளின் பயணிகள் மிகவும் வசதியான வழிமுறையில் குவாங்சியின் சான் சியாங் மாவட்டத்துக்கு வருகை தர முடியும். அவர்கள் அங்குள்ள துங் இன நடையுடை பாவனைகளை அனுபவிக்க விரும்புகின்றனர்" என்றார் அவர்.