து சி என்பது, சீன எல்லைப் பகுதிகளில் நியமிக்கப்பட்ட அலுவலர்களின் பதவியாகும். சீனாவின் யுவன் வம்சக்காலத்தில் இப்பதவி உருவாகியது. சீனாவின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிரதேசங்களின் சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த பழங்குடி இனத் தலைவர்களுக்கு இப்பதவி வழங்கப்பட்டது. உலக பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர மூன்று மாநிலங்கள் கூட்டாக விண்ணப்பித்த திட்டப்பணியில், ஹுனான் மாநிலத்தின் யோங் ஷுன் து சி நகர சிதிலம், ஹுபெய் மாநிலத்தின் டாங் யா (Tang Ya)து சி நகர சிதிலம், குவெய் சோ மாநிலத்தின் ஹெய்லோங்துன் சிதிலம் ஆகியவை இடம்பெறுகின்றன. இம்மூன்று சிதிலங்கள், ஹுனான், ஹுபெய் மற்றும் குவெய் சோ மாநிலங்கள் இணையும் பிரதேசத்தில் அமைந்துள்ளன. சிதில வகைகளில், து சி நகர சிதிலம், து சி இராணுவ சிதிலம், து சி அலுவல் கிராமம், து சி அலுவலகக் கட்டிட வளாகம், து சி பண்ணைத் தோட்டம், து சி குடும்ப கல்லறை வளாகம் ஆகியவை இடம்பெறுகின்றன. இந்த து சி சிதிலங்கள், கி. பி. 13 முதல் 20ஆம் நூற்றாண்டு வரை, து சி அமைப்பு முறை நடைமுறைக்கு வந்தபோது தோன்றின. சீனாவின் பண்டைக்காலத்தில் தென் மேற்கு பிரதேசத்தின் உள்ளூர் அலுவலர்களின் நிர்வாக விவேகத்தை இச்சிதிலங்கள் வெளிப்படுத்தியுள்ளன. சீனக் கலை ஆய்வகத்தின் ஆய்வாளர் யுவன் லீ கூறியதாவது:
"து சி அமைப்பு முறை, சிறப்புமிக்க அமைப்பு முறையாக சீனாவில் நீண்டக்கால வரலாறுடையது. து சி சிதிலங்கள், உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர விண்ணப்பம் செய்வதற்கு இரண்டு அம்ச முக்கியத்துவம் உள்ளன. முதலில், இந்த விண்ணப்பம் வெற்றி பெற்றால், ஹுனான் மற்றும் குவெய் சோ மாநிலங்களில், உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் இல்லாத வரலாறு முடிவுக்கு வரும். இரண்டு, து சி, சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களின் நிர்வாக அமைப்பு முறையாக இருந்தது. இது பண்பாட்டின் பல்வகைத் தன்மையை நிலைநிறுத்தியுள்ளது. நிலத்தின் மேற்பரப்பிலுள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் அழிந்து விட்ட போதிலும், சிதிலங்கள் பொதுவாக செவ்வனே பாதுகாக்கப்பட்டுள்ளன. சீனத் தேசத்தின் பண்பாட்டுப் பல்வகைத் தன்மையைப் பாதுகாப்பதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார் அவர்.