சீனாவின் தலைநகரான பெய்சிங் மாநகரம், நீண்டகால வரலாறும் செழிப்பான பண்பாடும் படைத்த ஒரு நகரமாகும். தனித்தன்மை வாய்ந்த பாரம்பரிய கைவினைஞர்கள் பலர் இங்கு கூடி வாழ்கின்றனர். அவர்கள் தயாரித்துள்ள பட்டங்கள், கண்ணாடி திராட்சைப் பழம், மண்ணாலான மனித பொம்மை முதலிய கைவினைப் பொருட்கள் அழகானவை, பயன்படக் கூடியவை. பண்பாட்டு பிரியர்களை அவை கவர்ந்துள்ளன. இந்த கைவினைஞர்கள் பெரும்பாலானோர், மஞ்சு, மங்கோலிய, குவெய் இன மக்களாவர். இன்றைய நிகழ்ச்சியில், பெய்சிங்கின் நாட்டுப்புற கைவினை கலை அவர்களால் எவ்வாறு பராமரிக்கப்பட்டு வளர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்வோமா?
பெய்சிங் நகரில் ஏப்ரல் திங்கள், வசந்த காற்று மிதமாக வீசுகின்றது. இக்காலம், பட்டம் பறக்கவிடுவதற்கு சிறந்த நேரமாகும். நகர மையத்திலுள்ள டின் ஆன் மேன் சதுக்கத்திலிருந்து பல்வேறு குடியிருப்பிடங்களில் உள்ள திடல்கள் வரை பட்டங்களை பறக்கவிட்டு மகிழ்வோரை எங்கும் காணலாம். ஆகாயத்தில் பறந்து செல்லும் தூக்கணாங் குருவி, வண்ணத்து பூச்சி கழுகு, யாழி வடிவங்களிலான பட்டங்களில் சில, சீனாவின் பாரம்பரிய முறையில் காகிதங்களால் செய்யப்பட்டவை. நவீன வடிவில் நெலுங் நார்களால் உருவாக்கப்பட்டவை. ஒப்பிட்டுப்பார்க்கையில், காகிதப் பட்டங்கள், வண்ண வண்ணமாகக் காட்சியளிக்கின்றன. அவை, தனித்தன்மைமிக்க சீன பாணியில் அமைந்தவை.
பட்டம் பறக்கவிடுவதற்கு சீனாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. பெய்சிங்கில், சீனாவின் பாரம்பரிய பட்டங்களில், "பட்டம் ஹா" எனும் கைவினைஞர் குடும்பம் உருவாக்கும் பட்டங்கள், மிகவும் பிரபலமானவை என்பது அடிக்கடி பட்டம் பறக்கவிடும் பழைய பெய்சிங்வாசிகளுக்கு தெரியும். "பட்டம் ஹா" என்பது, பெய்சிங் நகரில் ஹா எனும் குடிபெயர் உடைய குவெய் இன குடும்பத்தினர் உருவாக்கும் பட்டங்கள் எனப்பொருட்படுகிறது. இது, தற்போது, புகழ்பெற்றுள்ளது. இக்குடும்பத்தினர்கள், தரமான பட்டுத்துணியைக் கொண்டு பட்டங்களை உருவாக்குவர். பட்டங்களில் உள்ள படங்கள், உயிர் உள்ளது போலவே தெரிகின்றன. தனித்தன்மை வாய்ந்தவை. எனவே, மக்கள் அவற்றைப் பெரிதும் விரும்புகின்றனர்.