63 வயதான ஃபெங் யன் ஃபாங் அம்மையார், சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையாரின் கடையில், யாவ் இனத் துணி பின்னலுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களை வாங்குவதுண்டு. செய்தியாளர் அவரைச் சந்தித்த போது, அவர் 20 யுவான் செலவிட்டு, ஒரு சிவப்பு துணி துண்டை வாங்கினார். அவர் இத்துணியைக் கொண்டு, யாவ் இன ஆடையைத் தயாரிக்கத் திட்டமிட்டார்.
சாவோ பெங் க்ஸ்யாங்குடன் அதே வயதான பெண்களில், யாவ் இனத் துணி பின்னல் மற்றும் பூத்தையல் நுட்பத்தில் முற்றிலும் கைதேர்ந்தவர் குறைவு. அடுத்த தலைமுறை யாவ் இன பெண்களில், இக்கைவினை நுட்பத்தைக் கற்றுக்கொண்டோர் மேலும் குறைவு. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவர்கள் இக்கைவினை நுட்பத்தில் பேரார்வம் கொள்ளவில்லை. இரண்டு, அவர்கள் இக்கைவினை நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற பின், வாழ்க்கைக்காக கூடுதலாக சம்பாதிக்க முடியாது என்று சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையார் தெரிவித்தார். ஒரு ஜோடி யாவ் இன ஆடைக்கு, 4 ஆயிரம் யுவான் விற்கப்படுகிறது. ஆனால் இதைத் தயாரிக்க ஓராண்டு நேரம் தேவைப்படுகிறது. அவர்கள் இரண்டு நாட்களில் பூத்தையல் செய்யும் ஒரு உருவத்தை விற்பனை செய்த பின், சுமார் பத்து யுவான் மட்டுமே சம்பாதிக்க முடியும். சிக்கலான பூத்தையல் வேலைப்பாட்டுக்கு உழைப்பூதியம் மிக குறைவு என்று சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையார் தெரிவித்தார்.
யாவ் இன துணி பின்னல் மற்றும் பூத்தையல் கைவினை நுட்பத்தைக் கைதேர்ந்த பெண்களுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு, அவர்கள் பூவேலை செய்யும் ஒவ்வொரு உருவம் அல்லது துணியையும் சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையார் வாங்குகிறார். இதற்குப் பின் அவர் இவற்றை பதனீடு செய்து, விற்பனை செய்கிறார். ஓய்வு நேரத்தில், சாவோ பெங் க்ஸ்யாங் அம்மையார் ஜின் சியு தேசிய இனத் துவக்க நிலைப் பள்ளியின் மாணவர்களுக்கு பின்னல் மற்றும் பூத்தையல் கைவினை நுட்பத்தைக் கற்றுக்கொடுக்கிறார். மாணவர்கள் பூத்தையல் செய்யும் உருவங்களை அவர் வாங்குகிறார். இதன் மூலம், பூத்தையலில் இளம் தலைமுறையினரின் ஆர்வத்தை எழுப்ப வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.