ஆடல் குழு உறுப்பினர்கள், சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, திபெத், யுன்னான், குவாங் சி முதலிய இடங்களின் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். பண்டைக்காலம் தொட்டு, இவ்வினத்தவர்கள், ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களில் பலர், ஆடல் பாடலுடன் வளர்ந்துள்ளனர். குவாங் மிங் கூறியதாவது:
"என் ஊரில், பரவலான ஒரு கூற்று உண்டு. 'ஒரு குழந்தை பேச முடியும் போது, பாட முடியும். நடக்க முடியும் போது, ஆட முடியும்' என்பதாகும். என் ஊரில், சிறுபான்மைத் தேசிய இன மக்கள், ஆடல் பாடல் மீது கொண்டுள்ள அன்பை இது வெளிப்படுத்துகின்றது" என்றார், அவர்.
குவாங் மிங் நகரில் வாழ்ந்திருந்தார். இருந்த போதிலும், சிறு வயதில் குழந்தை கேளிக்கையகத்தில், தை இனம், ஹானி இனம் முதலியவற்றின் சிறுபான்மைத் தேசிய இன ஆடல்களை அவர் கற்றுக்கொண்டார். குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பிறந்த குவெய் இன மாணவி தன் ஷான்னைப் பொறுத்த வரை, "பாடல் கடல்" என அழைக்கப்படும் சுவாங் இன மலை கிராம சூழ்நிலையின் காரணமாக, சிறு வயதிலிருந்தே, சிறுபான்மைத் தேசிய இன பண்பாட்டை அவர் மிகவும் விரும்புகின்றார். அவர் கூறியதாவது:
"சீனாவின் சந்திர நாட்காட்டியின் படி, ஆண்டுதோறும் மார்ச் திங்கள் 3ஆம் நாள், சுவாங், மியெள, துங் ஆகிய இனங்கள் வசிக்கும் மலைக் கிராமங்களில், இளைஞர்களும், இளம் பெண்களும், மலையின் இரு பக்கங்களில், ஒருவரை நோக்கி ஒருவர் பாடுகின்றனர். சிறுபான்மைத் தேசிய இனப் பண்பாடு, ஆழ்ந்த அடிப்படை தன்மை கொண்டுள்ளது. ஆடலினால், மக்களின் உணர்வை வெளிப்படுத்த முடியும் என்று கருதுகின்றேன்" என்றார், அவர்.