டிங் சியாங் தோட்டம், சிங் வம்சத்தில் புகழ்பெற்ற அதிகாரி லீ ஹோங்ச்சாங் மற்றும் அவரது மகன் லீ ஜிங்மை உடன் இருந்த இல்லமாகும். டிங் சியாங் தோட்டம் மிகப் பெரியது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுடைய மூன்று பிரிட்டிஷ் பாணி கட்டிடங்கள் இதில் அமைந்துள்ளன. தோட்டத்தின் தெற்கு பகுதியில், மேலை நாட்டின் தோட்டக் கலையை சீனத் தனிச்சிறப்புடன் இணைக்கும் ஒரு பசுமையான பூங்கா உள்ளது. தோட்டக் கதவின் அருகிலுள்ள 100 மீட்டருக்கு மேலான குன்றிய சுவர், சிறப்பான வடிவில் இருப்பதால், பூங்காவில் பதுங்கிய டிராகன் என போற்றப்படுகிறது. டிங் சியாங் என்பது, லிலாக் (lilac) மலர் என்று பொருள். டிங் சியாங் தோட்டத்தில் lilac மரங்கள் அதிகமாக வளர்கின்றன. மலர் பூக்கும் காலத்தில், தோட்டத்தில் பெயர் இல்லா ஏரியின் மேல் உள்ள பாலத்தில் நின்று, காட்சிகளைப் பார்வையிடும் போது உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் என நம்புகின்றேன்.
சொங் சிங்லிங் அம்மையாரின் முந்தைய இல்லம், 1920ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தின் முக்கிய பகுதி வெள்ளை நிறத்திலும் கப்பல் வடிவிலும் உள்ளது. பச்சையான மரங்களுக்கிடையே மறைந்திருக்கும் இந்த அழகான கட்டிடம் அமைதியான உணர்வை வழங்குகிறது. முன்புற கதவைக் கடந்து சென்று, முதல் மாடியிலுள்ள மண்டபம், உணவு அறை, விருந்தினர் அறை ஆகியவற்றைப் பார்வையிட்ட போது, சொங் சிங்லிங் அம்மையாரின் வாழ்க்கை விபரங்கள் பற்றியும், மதிப்புக்குரிய விருந்தினர்களை அவர் சந்தித்த போது வெளிப்படுத்திய நேர்த்தியான பண்பையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது மாடியில் படுக்கை அறையும் பணியகமும் உள்ளன. இந்த இல்லத்திலுள்ள அருங்காட்சியகத்தில், அவரது ஒளிமயமான வாழ்க்கை பற்றி பல்வேறு கோணத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும். வெள்ளை சலவைக் கல்லாலான சிலை, நல்ல குணமுடைய சொங் சிங்லிங் அம்மையாரின் அழகை வெளிப்படுத்துகிறது.