மின் மற்றும் சிங் வம்சக்காலங்களின் போது, பூத்தையல் ச்சியாங் இனப் பிரதேசத்தில் மிகவும் பரவி விட்டது. பின்னர், இது குறுக்கு பின்னலாக மாறியது. குறுக்கு பின்னல் தையலும் பூத்தையலும், ச்சியாங் இன மகளிரின் பாரம்பரிய கைவினை திறனாகும். அவர்களுக்கு பத்து வயதாகும் போது, கண்டிப்பான பூத்தையல் பயிற்சியைப் பெற்று கற்றுக்கொள்ள தொடங்கினர். ஓய்வு நேரத்தில் இழை சுழற்றுதல், சணல் துணிப் பின்னல், குறுக்கு பின்னல், பூத்தையல் ஆகிய வேலைகளில் ஈடுபட்டனர். திருமணத்துக்காக மணமகளுக்கென அழகான ஆடைகளைத் தைக்க அவர்களால் இயன்றதனைத்தையும் செய்தனர். இதற்கு முன்கூட்டியே வரையப்பட்ட வரைபடம் அவர்களுக்கு தேவைப்படவில்லை. அவர்களின் தனித்திறமையிலேயே, வண்ணமயமான, தத்ரூபமான பல்வகை உருவங்களை தைக்கின்றனர். அவர்களின் பூத்தையல் பொருட்களில், இயற்கைக் காட்சிகள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் உள்ளிட்ட உருவங்கள் காணப்படுகின்றன. அந்த உருவங்கள், இன்பமான வாழ்க்கை மீதான ச்சியாங் இனத்தவர்களின் ஆசையை வெளிப்படுத்துகின்றன.
ச்சியாங் இன பூத்தையல் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மட்டுமல்ல. ச்சியாங் இன மக்களின் வாழ்க்கையில் ஆழமாக ஒன்றிணைந்தவை. அந்த இன மகளிரின் விவேகத்தை மதிப்பிடும் முக்கிய மாதிரி. ச்சியாங் இன மகளிர் அவர்களை அழகுப்படுத்தி, அவர்களின் அருமையான விருப்பங்களை தெரிவிக்கும் முக்கிய முறையும் அதுவாகும். இளைஞர்களும் இளம் பெண்களும் ஒருவருக்கொருவர் காதல் உணர்வை வெளிப்படுத்தும் அடையாளமும் அதுவாக இருந்துள்ளது.