யுன்னான் மாநிலத்தின் தாலி சோவின் வெய் ஷான் மாவட்டம், இம்மாநிலத்தின் குவெய் இன மக்கள் குழுமி வாழும் பிரதேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள குவெய் இனத்தவர், தனிச்சிறப்பு வாய்ந்த குவெய் இனப் பண்பாட்டு நடையுடை பாவனைகளை உருவாக்கினர். குவெய் இன மகளிர் சுறுசுறுப்பானவராகவும், கைத்திறமுடையவராகவும் இருக்கின்றனர். அவர்கள் பூத்தைக்கும் கைவினைப் பொருட்கள், அதிக மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இஸ்லாமியப் பண்பாட்டின் செல்வாக்குடன், உள்ளூர் பூத்தையல் படைப்புகளில், தனிச்சிறப்பு வாய்ந்த வடிவமைப்பும் பாணியும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக, மாசுமருவற்ற துணியில், இயற்கை காட்சிகள், தாவரங்கள், பறவைகள், நேர்த்தியான அரபு எழுத்துக்கள் ஆகியவை உருவங்களாக தைக்கப்படுகின்றன. பூத்தையல் படைப்புகளில், கழுத்துப்பட்டை, ஆடை, கதவுத் திரை, சமையலுடை, தலையணை உறை முதலிய அன்றாட வாழ்க்கைப் பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. கையால் பூ தைக்கப்படும் படைப்புகள், நடைமுறை வாழ்க்கை சார்ந்தவை. அவற்றை சேகரித்தால் மதிப்பு அதிகம் தான்.
வெய் ஷான் மாவட்டத்தில் குவெய் இனத்தவர் குழுமி வாழும் பிரதேசத்தில் உள்ளூர் மகளிர் ஓய்வு நேரத்தில், மூவர் அல்லது ஐவர் சேர்ந்து அமர்ந்து, பூத்தையல் பணியில் ஈடுபடுவதுண்டு. அவர்கள் அளவளாவி உரையாடும் அதேவேளையில் பூத்தையல் வேலையையும் செய்கின்றனர். அவர்கள் ஒருவர் ஒருவரிடமிருந்து பூத்தையல் திறனையும் கற்றுக்கொள்கின்றனர் அல்லது விரைவாக பூத்தைப்பதற்கு போட்டியிடுகின்றனர். வெய் ஷான் மாவட்டத்தின் யுன் சியன் வட்டத்தின் மா யன் அம்மையார், பூத்தையலில் தேர்ச்சிப் பெற்றவர் ஆவார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
"முற்காலத்தில் ஆடவர்கள் வேலையில் ஈடுபட்டனர். மகளிர் தத்தமது வீட்டில் பூத்தையலில் ஈடுபட்டனர். குவெய் இன மங்கையர் திருமணம் செய்தபோது, பூத்தையல் அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். திருமண விழா நாள், அவர்கள் தத்தமது கணவரின் குடும்பத்தின் உற்றார் உறவினர் அனைவருக்கும் தாங்களின் பூத்தையல் வேலைப்பாடு உடைய கைக்குட்டையை வழங்க வேண்டும். குவெய் இன மகளிர் இடைநிலை பள்ளி படிப்பை முடித்த பிறகு பூத்தையலைக் கற்றுக்கொள்ளத் துவங்கினர். கதவுத் திரை, தலையணை, போர்வை, போர்வை உறை ஆகியவற்றை இவ்வின மங்கையர் ஒவ்வொருவரும் தயாரிக்க முடியும். ஓய்வு நேரத்தில் அவர்கள் ஒன்றுகூடி சேர்ந்து அமர்ந்து, உரையாடி, பூத்தையல் வேலை செய்கின்றனர்" என்றார் அவர்.