|
சென்யி
சென்யி,1958 முதல் 1972 வரை சீன வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்தார்.
சீன மக்கள் விடுதலைப்படையை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் அதற்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவராகவும் அவர் விளங்கினார். ராணுவ நிபணரும் சீன மக்கள் குடியரசின் தலைமை தளபதியும் ஆவார். நவ சீனா நிறுவப்பட்ட பின், அவர் துணைத் தலமையமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் ராணுவக் கமிட்டியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.
1958முதல், துணைத் தலைமையமைச்சராகவும் வெளிநாட்டமைச்சராகவும் பொறுப்பு ஏற்ற அவர், மா சே-துங் மற்றும் சோ என்-லாயின் வெளிநாட்டுக் கொள்கை சிந்தனையை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தி, புதிய சீனாவின் நீண்டகால தூதாண்மை நெடுநோக்குக் கொள்கையை வகுப்பதில் பங்குகொண்டு, சில முக்கிய தூதாண்மை நடவடிக்கைகளில் சோ என்-லாய்க்கு உதவி புரிந்தார். 1952ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு, ஸ்தாலினைச் சந்தித்துரையாடினார். 1954ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் அவர் தலைமை தாங்கிய சீன கட்சி மற்றும் அரசாங்கப் பிரதிநிதிக் குழு ஜெர்மன் ஜனநாயகக் குடியரசிலும் போலாந்திலும் பயணம் மேற்கொண்டது. 1955ஆம் ஆண்டு ஏபரல் திங்களில் சோ என்-லாயின் முக்கிய உதவியாளர் என்ற முறையில் சீன அரசு பிரதிநிதிக் குழுவுறுப்பினரான அவர் பாண்டுங்கில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்துகொண்டார். 1958ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் துணைத் தலைமையமைச்சர், வெளிநாட்டமைச்சர் என்ற முறையில் முதன் முறையாக சோ என் லாயுடன் வட கொரியாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு, சீன மக்கள் தொண்டர் படை நாடு திரும்புவதற்கு உரிய முறையில் ஏற்பாடு செய்தார். 1960ல், அவர் சோ என்-லாயுடன் அல்லது தனியாகப் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி, மியன்மர், இந்தியா, நேபாளம், கம்போடியா, மங்கோலியா, ஆப்கான் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். அப்போது, சீன-நேபாள நட்புறவு உடன்படிக்கையும் பொருளாதார உடன்படிக்கையும் உருவாக்கப்பட்டன. சீன-கம்போடிய நட்புறவு மற்றும் பரஸ்பர அனாக்கிரமிப்பு உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன. சீன-மங்கோலிய பரஸ்பர உதவி நட்புறவு உடன்படிக்கையும் சீன-ஆப்கான் நட்புறவு மற்றும் பரஸ்பர ஆக்கிரமிப்பு தவிர்ப்பு உடன்படிக்கையும் ஏற்படுத்தப்பட்டன.
|