மிங் வம்சத்தின் இறுதிக்காலத்தில் பேரரசரின் அரணைமனையில் குன் ச்சு அரங்கேற்றம் தொடங்கியது. இது, பேரரசருக்கு பொழுதுபோக்கு வழங்கும் புதிய வடிவமாக மாறியது. அதேவேளையில், வட சீனாவில் குன் ச்சு பரந்தளவில் பரவி, பொது மக்களால் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த காலக் கட்டத்தில், குன் ச்சு இசை நாடகப் பிரமுகர்கள் அதிகமாக தோன்றினர். நாடக ஆசிரியர்கள், அறிஞர்கள், நாட்டுப்புற குன் ச்சு கலைஞர்கள் குன் ச்சு இசை நாடக ஆய்வில் ஈடுபட்டு, அவரவர் திறமைகளுக்கு ஏற்றாற்போல், குன் ச்சுவை மேலும் உயர்ந்த நிலைக்கு முன்னேற்றினர்.
சிங் வம்சக்காலத்தில், குன் ச்சு, விறுவிறுப்பாக வளர்ந்து வரும் போக்கினை நிலைநிறுத்தியது. மிங் வம்சத்தின் இறுதிக்காலத்திலும், சிங் வம்சத்தின் துவக்கக்காலத்திலும், வூ சியாங் பாணி எழுத்தாளர்கள் குழுவைத் தவிர, சூ சோ பிரதேசத்தில், இன்னொரு குன் ச்சு எழுத்தாளர்கள் குழு உருவாகியது. முந்தைய தலைமுறை நாடக ஆசிரியர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் நடைமுறை வாழ்க்கையில் மேலும் கவனம் செலுத்தினர். படைப்புகளை இயற்றியதன் மூலம் அப்போதைய அரசியல் நிலைமையை மேம்படுத்த அவர்கள் விரும்பினர். சூ சோ பாணி எழுத்தாளர்கள் குன் ச்சு கலை துறைக்கு புதிய தனிச்சுவையை தந்தனர். மிங் வம்சத்தின் பல்வேறு காலங்களின் அரசியல் நிலைமை, புதிதாக தோன்றிய நகரவாசிகள் வகுப்பினர்களின் சிந்தனை மற்றும் வாழ்க்கை நிலைமை ஆகியவை அவர்கள் இயற்றிய படைப்புகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. கலை ரீதியில், ஒட்டுமொத்த கதை அமைப்புப் பாணியும் அவர்களின் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. சூ சோ பாணி எழுத்தாளர்களில் Li Yu என்பவரின் பங்களிப்பு மிக அதிகம். அவர் குன் ச்சு அரங்கேற்றத்தின் தலைசிறப்பை முழுமையாக கற்றுத் தேர்ந்து, இசை நாடகம் எழுதுவதில் அரங்குகளின் தனித்தன்மையையும், இலக்கியத் தன்மையையும் சேர்த்து, 30க்கு மேலான தலைசிறந்த குன் ச்சு படைப்புகளை இயற்றினார். அப்படைப்புகள், அக்காலத்திலும், பிற்காலத்திலும் அதிக பார்வையாளர்களின் பாராட்டை வென்றெடுத்தன.