ஹுவா தெங் கலையில், சீனாவின் பாரம்பரிய விளக்குகள் அரங்கேற்ற கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. விசிறிகளும், கைக்குட்டைகளும் மக்களின் கைகளில் அசைந்தாடுகின்றன. மக்கள் அசைந்து ஆடும் போது, உள்ளூர் பேச்சு வழக்கில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுகின்றனர். இப்பாடல்களின் வரிகள் குறைவு. இப்பாடல்களில் முழுமையான கதைகள் விவரிக்கப்படுவதில்லை. இப்பாடல்கள் பெரும்பாலும் வாழ்த்துக்கள், மங்கலமான மொழிகள் ஆகியவை மூலம் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
வரலாற்றுப் பதிவின்படி, சிங் வம்சத்தின் பேரரசர் சியன் லோங் ஆட்சி புரிந்த காலத்தில், பு திங் மாவட்டத்தில் ஹுவா தெங் கலைக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இக்குழுக்கள் மூலம் ஹுவா தெங் கலை பு திங் மாவட்டத்தில் தலைமுறை தலைமுறையாக பரவி வந்துள்ளது.
பு திங் மாவட்டத்தின் நாட்டுப்புறக் கலைக்குழு, பய் யன் வட்டத்தின் யீ கே ஷூ கலைக்குழுவின் அடிப்படையில் 2008ஆம் ஆண்டு ஜூலை திங்களில் நிறுவப்பட்டது. ஹுவா தெங் கலையை நேசிக்கும் கிராமவாசிகள் இக்குழுவை அவர்களது விருப்பப்படி உருவாக்கினர்.