சீனாவின் மக்கள் தொகை மிக அதிகமாக இருப்பதால், தனது ஆற்றலைச் சார்ந்து, உணவு தானியப் பாதுகாப்புப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று சீன வேளாண் துறை அமைச்சர் ஹான் ச்சாங் ஃபு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"உலகளவில் உணவு தானிய வர்த்தக அளவு 30 ஆயிரம் கோடி கிலோகிராம் மட்டுமே. இது சீனாவின் தானிய உணவு விளைச்சலில் 50 விழுக்காட்டுக்கு சமம். உலகளவில் அரிசி வர்த்தக அளவு 3 ஆயிரத்து 500 கோடி கிலோகிராம் மட்டுமே. இது, சீனாவின் அரிசி நுகர்வு அளவில் நான்கில் ஒரு பகுதிக்குச் சமம். உலக வர்த்தக அளவு, சீனாவின் தேவையை நிறைவு செய்ய முடியாது என்று புரிந்து கொண்டுள்ளோம்" என்றார் அவர்.
சீனாவின் உணவு தானியப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதில், அதிக அறைகூவல்கள் உள்ளன. நகரமயமாகி வரும் போக்கில் விளைநிலங்களும் கிராம உழைப்பாளர்களும் குறைவது, தானியங்கள் பயிரிடுவதால் பெறும் பயன்கள் குறைவது ஆகிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தானியத்தைப் பயிரிடுவதில் விவசாயிகளை ஊக்கமூட்டுவது, முக்கிய பிரச்சினையாகும்.
வருமானத்தை அதிகரித்து, விளைநிலங்களைப் பயிரிட விவசாயிகளுக்கும் அளிக்கும் ஊக்குவிப்பை அதிகரித்தால் தான், சீனாவின் தானிய உணவுப் பாதுகாப்பையும், முக்கிய வேளாண் பொருட்களின் வினியோகத்தையும் உத்தரவாதம் செய்ய முடியும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டி உறுப்பினரும், சீன மத்திய கிராம பணிக்குழுவின் தலைவருமான சென் ச்சி வென் தெரிவித்தார்.
தானியங்களை பயிரிடுவதில் விவசாயிகளுக்கு அளிக்கும் ஊக்குவிப்பை அதிகரிக்கும் பொருட்டு, சீனா வேளாண் துறை சலுகைக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் மூலம் கடந்த ஆண்டு, சீன விவசாயிகளுக்கு கிடைத்த நேரடி நிதி உதவி, 16 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. ஆனால், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சீனாவின் வேளாண் நிதியுதவி, விவசாயிகளின் வருமானத்தில் வகிக்கும் விகிதம் இன்னும் தாழ்வாகவே இருக்கிறது. நிதி நிலைமை எவ்வாறு இருந்தாலும், வேளாண் துறைக்கான ஒதுக்கீட்டுத் தொகையைக் குறைக்கக்கூடாது என்று 2014ஆம் ஆண்டுக்கான அரசுப் பணியறிக்கை சுட்டிக்காட்டுகிறது.