லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் "கிரிக்கெட்டின் தாய்வீடு' என்றழைக்கப்படும் லார்ட்ஸில், 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.
தோனி தலைமையிலான இந்த வெற்றியை இந்திய அணியின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனலாம். எப்போதுமே விமர்சனத்துக்கு உள்ளாகும் இஷாந்த் சர்மா இரண்டாவது இன்னிங்சில் விஸ்வரூபம் எடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தி, டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த பந்து வீச்சைப் (7-74) பதிவு செய்தார். முதல் இன்னிங்ஸில் இளம் வீரர் ரஹானே லார்ட்ஸில் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார் என்றால், புவனேஸ்வர் குமார் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதோடு 2-வது இன்னிங்ஸில் முக்கியமான நேரத்தில் அரைசதம் அடித்து கைகொடுத்தார் புவனேஸ்வர் குமார். இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியதில் முரளி விஜய் முக்கிய பங்கு வகித்துள்ளார். இருப்பினும் 95 ரன்களில் ஆட்டமிழந்து லார்ட்ஸில் சதம் அடித்த வீரர்கள் வரிசையில் அவர் இடம்பெறத் தவறினார்.
சதம் நழுவியது குறித்து முரளி விஜய் கூறுகையில் "இந்திய அணி வெற்றி பெற்றால், சதம் அடிக்க முடியாதது வருத்தம் அளிக்காது' என்றார். அவரது எண்ணம் பலித்துள்ளது.