சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டின் முதலாவது காலாண்டில் நடைபெறும். தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் அழைப்பின் கீழ் இது நடைபெறும். கூட்டத்தொடர் காலம் 15 நாட்கள் அளவில் இருக்கும். மூன்றில் இரண்டு பகுதிக்கு மேலான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் நிலையில் தான், இக்கூட்டத்தொடர் நடத்தப்பட முடியும்.
அதிகாரப்பூர்வமான கூட்டத்தொடர் நடைபெறும் முன்பு, தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டி ஆயத்த கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தொடர் துவங்கிய பிறகு, முழு அமர்வுகளும் பிரதிநிதிக் குழுக் கூட்டங்களும் நடைபெறும். தொடர்புடைய பணி அறிக்கைகளைக் கேட்டறிவது, தொடர்புடைய தீர்மானங்களின் விளக்கத்தை கேட்டறிவது, பல்வகை அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் பற்றி வாக்கெடுத்து தீர்மானம் அளிப்பது ஆகியவை முழு அமர்வுகளின் முக்கிய கடமைகள். பணி அறிக்கைகளையும் தீர்மானங்களையும் பரிசீலனை செய்வது என்பது பிரதிநிதிக் குழுக் கூட்டங்களில் முக்கிய அம்சங்கள். இக்கூட்டத்தொடரில், பிரதிநிதிகள் சுதந்திரமாக பேசி தத்தமது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.
தேசிய மக்கள் பேரவை வெளிப்படையாக நடைபெறும். முழு அமர்வுக் கூட்டத்தில் விருந்தினர்களாக, அழைக்கப்படும் சீனாவுக்கான வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொள்வார்கள்.
தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறும் முன்பு செய்தியாளர் கூட்டம் நடத்துவது வழக்கம். இதில், சீனா மற்றும் வெளிநாடுகளின் செய்தி ஊடகங்களிடம் கூட்டத்தொடர் பற்றிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்.