உலகப் பொருளாதார கருத்தரங்கின் ஆண்டுக் கூட்டத்தில் சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த உரையில் சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய சூழ்நிலை பற்றிய விளக்கமானது, பல நாடுகளின் பொருளியல் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோரின் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனப் பொருளாதார வளர்ச்சியில் முந்தைய சில ஆண்டுகளில் காணப்பட்ட உயர்வேக அதிகரிப்பை விட, அண்மைக்காலத்தில் வளர்ச்சி வேகம் குறைவு பற்றி சிலர் கவலையை எழுப்பியுள்ளனர். இந்த கவலை குறித்து, தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் தனது உரையில் வெளிநாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் கருத்துக்களை குறிப்பிட்டதோடு, சீனப் பொருளாதார வளர்ச்சியில் கடும் வீழ்ச்சி காணப்படப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நாணய இடர்பாடு தோன்றுவதைத் தடுக்கும் வகையில், சீனா உகந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
சீனாவின் ட்சிங்குவா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் மேலாண்மைத் துறைக் கல்லூரியின் பேராசிரியர் லீ தாவ்குய் இது பற்றி பேசுகையில், தலைமையமைச்சர் லீ கெச்சியாங்கின் இந்த வாக்குறுதியே, சீனப் பொருளாதார வளர்ச்சி மீது வெளிநாடுகளின் கவலையை அகற்றி விடும் என்று கருத்து தெரிவித்தார்.
தவிரவும், முன்பு உயர்வேகத்தில் இருந்து விட்டு, சீனப் பொருளாதாம் தற்போது நடுத்தர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றும் லீ கெச்சியாங் கூறியுள்ளார். இது பற்றி பீக்கிங் பல்கலைக்கழகத்தின் தேசிய வளர்ச்சி ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் லின் யீஃபூ பேசுகையில்
கடந்த 36 ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் சராசரியாக ஆண்டுக்கு 9.7விழுக்காடு என்ற விகிதத்துடன் அதிகரித்துள்ளது. தற்போது, இது 7விழுக்காடு என்ற வேகத்துடன் வளர்ந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி படிப்படியாகவும் மென்மையான முறையிலும் மாறிமாறிச் சரிப்பட்டு வருகிறது என்று கருத்து தெரிவித்தார்.
குறிப்பாக, லீ கெச்சியாங் தனது சொற்பொழிவில் 'இரட்டை பொறிகள்' என்ற வளர்ச்சிக் கண்ணோட்டத்தை முன்வைத்துள்ளார். அது, சந்தைக்கும் அரசுக்கும் இடையேயான உறவைச் சீராக கையாளும் நோக்கம் என்று தெரிகிறது.
எதிர்காலத்தில் சீனப் பொருளாதார வளர்ச்சி இலக்கு மீது நம்பிக்கைக் கொள்வதாக, லின் யீஃபூ தெரிவித்தார். அதற்கு அவர் இரண்டு காரணங்களைக் கூறியுள்ளார்.
ஒருபுறம், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் ஒன்றான சீனாவில், அதிக முதலீட்டு வாய்ப்புகள் நிலவுகின்றன. தொழில் நுட்பத்தின் மேம்பாடு, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகரமயமாக்கம் போன்றவை அதிக முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
மறுபுறம், சீனாவின் அரசு சாரா கையிருப்பின் விகிதம், 50விழுக்காடாக உள்ளது. மேலும், 4லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்நியச் செலாவணி கையிருப்பையும் சீனா கொண்டுள்ளது. இவற்றால், முதலீடு செய்வதற்கான மூலதனமும் மூலவளமும் செழுமைமிக்கதாக உள்ளன என்று லின் யீஃபூ குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியாதாவது
சீனாவுக்கு அதிக வாயப்புகளும் வளங்களும் உண்டு. இந்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தினால், நடுத்தர மற்றும் உயர்வேகத்துடன் வளரும் இலக்கை தடையின்றி நிறைவேற்றலாம் என்று நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.