சீன மொழி ஊடகங்களின் பொருளாதாரக் கருத்தரங்கு 24ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தைச் சேர்ந்த சேங் மாய் மாவட்டத்தில் நடைபெற்றது. 24 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 60க்கும் மேற்பட்ட சீன மொழி ஊடகங்களின் பிரதிநிதிகள், சீனா மற்றும் தென் கிழக்காசியாவின் சுற்றுலா நகரங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிஞர்கள், சீன நடுவண் அரசு மற்றும் உள்ளூர் அரசு வாரியங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 200க்கும் அதிகமானோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர். பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதையின் கட்டுமானம் குறித்து அவர்கள் ஆராய்ந்து விவாதம் நடத்தினர்.
சுருக்கமாக ஒரு மண்டலம் ஒரு பாதை என அழைக்கப்படும் இந்த தொலைநோக்கு கட்டுமானத்துக்கு வெளிநாடுகளிலுள்ள சீனர்கள் முக்கிய உதவியாளராக பங்காற்றுவர். கடல்வழி பட்டுப்பாதையில் ஹாய்நான் மாநிலம் முக்கிய நிலையாக திகழ்ந்து நல்ல வாய்ப்புகளைப் பெறும். ஒரு மண்டலம் ஒரு பாதை என்பது தொடர்பான கருத்து மற்றும் முன்னேற்றப் போக்கைச் சீன மொழி ஊடகங்கள் உலகளவில் ஆக்கப்பூர்வமாக பரப்புரை செய்ய வேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.