• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தூதர்: இருநாட்டுறவை மேம்படுத்தும் இந்தியத் தலைமை அமைச்சரின் சீனப் பயணம்
  2015-05-14 16:03:04  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சீனாவின் பழமை வாய்ந்த நகரான சீ ஆனைச் சென்றடைந்து, 3 நாட்கள் தொடரும் அரசு முறை பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கினார். தலைமை அமைச்சராகப் பதவியேற்ற பின் அவர் மேற்கொள்ளும் முதலாவது சீனப் பயணம், சீன-இந்திய உறவில் முக்கிய அம்சமாக அமையும். இப்பயணத்தை முன்னிட்டு, இந்தியாவுக்கான சீனத் தூதர் லெ யுசேங் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குச் சிறப்பு பேட்டியளித்தார். இந்தியத் தலைமை அமைச்சரின் சீனப் பயணம், இருநாட்டு கூட்டுறவின் உள்ளடக்கத்தை அதிகரித்து, எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் அதிகமான ஒத்துழைப்பு வாய்ப்புகள் ஏற்படும். தலைமை அமைச்சர் மோடி மேற்கொள்ளும் சீனப் பயணத்துக்காக இருநாடுகளின் தொழில் நிறுவனங்கள் முழுமையான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. பல ஒத்துழைப்பு திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று லெ யுசேங் கூறினார். சீன-இந்திய உறவு மற்றும் ஒத்துழைப்பின் வளர்ச்சி பற்றி அவர் மேலும் கூறியதாவது—

"அதிக அளவு மக்கள் தொகை கொண்ட சீனாவும் இந்தியாவும் வளரும் நாடுகளாகும். தேசிய மறுமலர்ச்சிக்கான முக்கிய கட்டத்தில் இருநாடுகளும் உள்ளன. வளர்ச்சி இலக்கும், கடமையும் ஒரேமாதிரியாக உள்ளதால், இருநாடுகளின் தொலைநோக்கு மற்றும் சிந்தனை இணைக்கப்படலாம். நியாயமான புதிய சர்வதேச ஒழுங்கின் உருவாக்கத்தை முன்னேற்றுவதில் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்கும் சீனாவும் இந்தியாவும் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்" என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் இருநாடுகளுக்கிடையிலான உயர் நிலை பரிமாற்றங்கள் அதிகம். பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பும் வலுவடைந்து வருகிறது. இரண்டு தொழில் பூங்காக்களின் கட்டுமானம், சீன உயர்வேக இருப்புப்பாதை மற்றும் இந்திய தயாரிப்பு, பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளிலான இருநாட்டு ஒத்துழைப்பு முதலியவை, மோடியின் சீனப் பயணத்தில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சங்களாகும். குறிப்பாக, இந்திய தயாரிப்பு எனும் திட்டம் சீனத் தொழில் நிறுவனங்களின் கவனத்தை ஈர்துள்ளது என்று லெ யுசேங் கூறினார். அத்துடன் சீன முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்திய தரப்பும் பல சலுகைகளை வழங்கி வருகிறது.

பொருளாதார மற்றும் வர்த்தகத் துறை தவிர, பண்பாட்டு பரிமாற்றமும் மனித தொடர்பும் இருநாட்டுறவின் வளர்ச்சிக்கு முக்கிய அம்சமாக உள்ளது. சீனாவின் தாங் வம்சத்தின் மூத்த மதகுருமார் சுவான்சாங், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் புனிதப் பயணம் மேற்கொண்டு, மத திருமறை நூல்களை சீனாவுக்குக் கொண்டு வந்தார். சீ ஆன் நகரில் அவரால் பொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல்கள் பெரிய வன வாத்து கோபுரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் பயணம் மேற்கொள்ளும் போது சீ ஆன் நகருக்கு மோடி முதலில் வருகை தருகிறார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீ ஆன் நகரில் மோடியை வரவேற்கிறார். இப்பயணத்துக்கு சீனத் தரப்பு அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. லெ யுசேங் கூறியதாவது—

"சீன-இந்திய பண்பாட்டுப் பரிமாற்றம் சீ ஆன் நகரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தலைமை அமைச்சர் மோடி சீ ஆன் நகரில் மேற்கொள்ளும் பயணம் இருநாட்டு பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும்" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040