நேபாளத்தில், பருவ காற்று மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற சீற்றத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காணாமல் போயினர். மேலும், 20பேர் காயமடைந்தனர். இதில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளன என்று நேபாள உள்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புதவி மேற்கொள்ள காவல்துறையினர் மற்றும் படையினர்களை நேபாள அரசு அனுப்பியுள்ளது. ஆனால், பல பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் உடைந்துள்ளன. இது மீட்புதவிப் பணிகளுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தியது.
எதிர்வரும் சில நாட்களுக்கு, பருவ காற்று மற்றும் பலத்த மழை தொடரும் என்று நேபாள வானிலை ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.