வெளியே வந்த பேரரசன் மக்கள் மதிலின் வெளியே அழுது கூச்சலிடுவதைக் கண்டு, பணியாளர்களை அழைத்து அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டான். பின், தனக்கு மிக நெருக்கமான சில அமைச்சர்களுடன் தலைநகரை விட்டு புறப்பட்டான்.
பேரரசனும் அவனது அமைச்சர் பரிவாரமும், தென்பகுதியை அடைந்தபோது வசந்தகாலமாக இருந்தது. பசுமையான மலைகள், தெளிவான நீர் சொரியும் சுனைகள், அழகாய் பூத்துக்குலுங்கும் மலர்கள், பாடித்திரிந்த பறவைகள் என வசந்தகாலச் சூழல் இனிமையாக அங்கே நிறைந்திருந்தது. அவர்கள் யாங்ஷோ, சூஷோ மற்றும் ஹாங்ஷோவுக்குச் சென்று, அழகான இயற்கைக் காட்சிகளையும், அதற்கு ஈடான அழகிய இளம்பெண்களையும் ரசித்து மகிழ்ந்தனர். இதனிடையில், மாளிகையின் வெளியே இருந்த போபுரத்தின் கூரையிலிருந்த ஃபீனிக்ஸ் பறவையும், டிராகனும் அங்கிருந்து பறந்து சென்றன. மாளிகையே கூட ஆள் அரவமற்ற நிலையில் காணப்பட்டது. மாளிகையின் உள்ளேயிருந்த பேரரசனின் வைப்பாட்டிகள் வானையும், மண்ணையும் சபித்ததோடு, வெறிச்சோடிப் போன மாளிகையில் நிற்கதியாக நிற்கக் காரணமான கற்சிங்கங்களை வசைபாடி தூற்றினர். மறுபக்கத்தில், மார்க்கோ போலோ பாலத்தின் இரண்டு பெரிய தூண்களின் மேலிருந்த சிங்கங்களோ, பேரரசன் வருகிறானா என்று கழுத்தை நீட்டிப்பார்த்த வண்ணமாய் நின்றன. காத்துக்காத்து கண்கள் பூத்துக் களைத்த சிங்கங்கள் தென் திசையை நோக்கி ஓங்கிக்குரலெடுத்துக் கர்ஜித்தன.