இப்படித்தான், மேற்கு ஹான் வம்சப் பேரரசர் லியு பாங்கின் பேரன் லியு ஆன், இறவாவரம் பெறும் மாயத்தை அறிய பேராவல் கொண்டிருந்தான். எனவே மலைமேல் சென்று காடுகளில் அலைந்து, இறவாவரம் தரும் மருந்தை தயாரிக்க முற்பட்டான். இறவாவரம் தரும் அமுதத்தை தயாரிக்க அவன் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆனால் அவன் ஒருமுறை வெண்மையும், மென்மையுமாக காணப்பட்ட ஒரு பொருளை தயாரித்தான். சோயா அவரையின் சாற்றையும் அதாவது பாலையும், உறையவைக்கும் பொருளான கனிக்கல்லையும் சேர்த்து அவன் செய்த அந்த திரள், அழகாகவும், நறுமணம் வீசுவதாகவும் இருந்ததது. அருகே இருந்த கிராமவாசிகள், லியு ஆன் செய்த அந்த வெண்ணிற கட்டியை சுவை பார்க்க ஒப்புக்கொண்டனர். அமுதமாக இல்லாவிட்டாலும், அது மிகவும் சுவையாக இருந்தது. மக்களுக்கு அந்தச் சுவை பிடித்துப்போனது. அதை அவர்கள் சோயா அவரை தயிர், அதாவது தோஃபூ என்று அழைக்கத்தொடங்கினர். இப்படித்தான் எதேச்சையாக தோஃபூவை கண்டுபிடித்த பெருமை லியு ஆனுக்கு கிடைத்தது. தற்போதைய ஆன்ஹூய் மாநிலத்திலுள்ள, லியு ஆன் வாழ்ந்த ஷோஷியன் வட்டம் தோஃபூவின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.