சந்திர நாட்காட்டியின் படி மூன்றாம் திங்களின் மூன்றாம் நாள், மேற்குலக ராணியின் பிறந்த நாள். அந்நாளில் பீச் விருந்து நடைபெறும். இந்த விருந்தில் கல்ந்துகொள்ள, வானுலகம், மண்ணுலகம் மற்றும் நீருலகக் கடவுளர்கள், தேவைதைகளுக்கு பொதுவாக அழைப்பு விடுக்கப்படும். விருந்தில் மேற்குலக ராணி, தனது தோட்டத்தில் இருந்து இறவா வாழ்வு தரும் பீச் கனிகளையும், பீச் மதுரசத்தையும் விருந்தினர்களுக்கு அளித்தாள். அந்த வகையில் நிலம் வாழ் டிராகனாக மாறியதால் வெள்ளை டிராகனும் இந்த விருந்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டாள். விருந்துக்காக செல்லும் வழியில் அழகானதோர் இளைஞனை சந்தித்தாள் வெள்ளை டிராகன். அவன் கிழக்குக்கடலின் டிராகன் மன்னனின் மூன்றாவது மகனாவான். வெள்ளை டிராகனை கண்டதும், எங்கே போகிறாள் என்று அவன் கேட்க, அவள் பீச் விருந்தில் கலந்துகொள்ளப்போவதாகக் கூற, தானும் அங்கேதான் செல்வதாக கூறி, இருவரும் சேர்ந்தே போவோம் என்று சொல்லிவிட்டு, வழி நெடுக பேசிக்கொண்டே சென்றான் டிராகன் மன்னனின் மூன்றாவது மகன். இருவரும் விருந்து முடிந்தும் பேசிக்கொண்டே தங்கள் இருப்பிடம் நோக்கி திரும்பிச்செல்ல, விடைபெறும் முன், நான் உன்னை நாளை சந்திக்கலாமா என்று அவன் கேட்க, அவளும் சரி என்றாள். இருவருக்குமிடையில் அந்த அளவுக்கு புரிதலும், நட்பும் மலரத்தொடங்கியிருந்தது. அடுத்தநாள் விடியலுக்கு முன்பேயே மேகங்கள் மீதேறி அவளைச் சந்திக்க வந்தான் டிராகன் மன்னனின் மூன்றாவது மகனான இளவரசன். அவர்கள் இருவரும் அறியமலே காதல் வயப்பட்டனர். பின் சில முறை சந்திப்புகள் தொடர, அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என்று உணர்ந்துகொண்டனர். பொதுவாகவே தன் காதலியை சந்திக்க வரும் டிராகன் இளவரசன், நீருலகைச் சேர்ந்தவன் என்பதால், தன்னோடு காற்றையும், மழையையும் தன் காதலி இருந்த லுங் மலைக்கு உடன் கொண்டுவருவான். நீரின்றி அவனால் இருக்க இயலாது.