இதையெல்லாம் கேட்டு கொதித்த டிராகன் மன்னன், கோபத்தில் தன் மூன்றாவது மகனை அடைத்து வைத்தான். வீட்டுச்சிறைக்குள் மூன்றாண்டுகள் கிடந்தான் விதிகளை மீறி காதல் வயப்பட்ட டிராகன் இளவரசன். அடைக்கப்பட்டு கிடந்தாலும், காதலி வெள்ளை டிராகன் மட்டுமே அவன் எண்ணம் முழுதும் இருந்தாள். அவளையே நினைத்துக்கொண்டிருந்தான் இளவரசன். தன்னுடைய மாளிகையிலிருந்து அவன் லுங் மலையை நோக்கி பார்த்து நிற்க, அங்கே லுங் மலையில், கிழக்குக்கடலின் திசையையே பார்த்து நின்றாள் அவனது காதலி வெள்ளை டிராகன். ஒருவரை ஒருவர் காணாத ஏக்கத்தில் இருவருமே உடல் மெலிந்து போயினர்.
தன் மகனை தனியே அடைத்துவைத்து கட்டுப்படுத்தியும் அவனது காதலியை நினைத்து வாடுகிறான் என்று புரிந்துகொண்ட டிராகன் மன்னன், அவனுடம் பேசி விளையாட நீருலக அழகு தேவதைகளை அனுப்பி வைத்தார். ஆனால் அவனோ, எந்த அழகியையும் கண்கொண்டு பாராதவனாய், தன் காதலியை சென்று காண அனுமதி கேட்டு மேலும் கெஞ்சத் தொடங்கினான்.