முசுக்கொட்டை மரத்தாள், மென்மை, பூச்சி தடுப்பு, வண்ணம் இழக்காமை, நீர் உறிஞ்சும் தன்மை ஆகிய சிறப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இத்தாளை அதிக காலம் பாதுகாக்கலாம். அன்றாட வாழ்க்கையில், மருந்துகளையும், உணவுப் பொருட்களையும் பொதிவதற்கும், காலுறை செருப்புப் பட்டைகளைத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமல்ல, உய்கூர் இனத்தவர் அணியும் வண்ண தொப்பி தயாரிப்பில் துணைப் பொருளாக இத்தாள் பயன்படுத்தப்பட்டது. தவிர, பணத்தையும், புத்தகங்களையும் அச்சிடுவதற்கும், விசிறி தயாரிப்பதற்கும் இத்தாள் தான் பயன்படுத்தப்பட்டது. காலத்தின் வளர்ச்சிப் போக்கில், கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளில், முசுக்கொட்டை மரத்தாள், உய்கூர் இனத்தவர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகி விட்டது. தாள் தயாரிப்பில் ஈடுபட்ட கைவினை கலைஞர்கள் வேறு வேலைகளில் ஈடுபட துவங்கினர். 21வது நூற்றாண்டின் துவக்கத்தில், ஹெதியன் பிரதேசத்தின் மொ யூ மாவட்டம், முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு நுட்பம் கையேற்றப்படும் இறுதி இடமாகும். Pu Qia Ke Qi வட்டத்தில், மூன்று குடும்பங்கள் மட்டுமே முசுக்கொட்டை மரத்தாட்களை இப்போது தயாரிக்கின்றன. முதியவர் Tuo Hu Ti Ba Keவின் மகன் துர்சுன் கூறியதாவது:
"முசுக் கொட்டை மரத் தாளுக்கான தேவை மிகவும் குறைந்தபோது, அதனை வாங்க மக்கள் இல்லை. என் குடும்பத்தினரின் வாழ்க்கையில் அதிக இன்னல்கள் ஏற்பட்டன. அப்போது என் தந்தை தற்காலிகமாக இக்கைவினை நுட்பத்தைக் கைவிட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளில், இக்கிராமத்தில் பயிரிடப்பட்ட முசுக்கொட்டை மரங்களும் குறைந்து வருகின்றன. முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்புக்கு பயன்படும் மூலப்பொருட்களும் குறைந்து விட்டன" என்றார் அவர்.