• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி வரலாறு குறித்து என் பார்வையில் அன்றும் இன்றும் ஒரு சிறு கண்ணோட்டம்!
  2013-06-18 19:48:39  cri எழுத்தின் அளவு:  A A A   
அன்று.....

முதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வானொலியின் குரல் ஒலிக்கத் துவங்கியது எனலாம். சீனாவின் குறிப்பிட்ட‌சில நகரங்களில் அரசியல் சூழலுக்காகவே உதயமான வானொலி ஒலிபரப்பாக இருந்தது. சீன கம்யூனிசக் கட்சி மார்ச் மாதம் 1940ல் மாஸ்கோவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒலியலைபரப்பிகளின் ஊடாக சோதனை முயற்சியைத் துவங்கியது. ஷின்ஹுவா புதிய சீன வானொலி ( Xinhua New Chinese Radio (XNCR) ) என்ற பெயரில் யான்னானிலிருந்து 1940ம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள்30ம் நாள் ஒலிக்கத் துவங்கியது. இந்த வானொலியானது 1945களில் இதன் நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டுச் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், போர் குறித்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றோடு கலை மற்றும் இலக்கியஞ்சார்ந்த‌ நிகழ்ச்சிகளை பரவலாக ஒலிபரப்பத்துவங்கியது.

சீன வானொலி நிலையம் போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்தில் சீனாவின் வடமேற்கு பகுதியான யான்னானிலிருந்து 1941ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3ம் நாள் பீகிங் அதன் ஒலிபரப்பைத் துவங்கியது. துவங்கியபோது ஜப்பானிய மொழியில் மட்டும் ஜப்பானிய-சீன அறிவிப்பாளர் ஹாராகியோஷி அவர்களால்15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. அதன் பின் 1947ல் செப்டெம்பர் 11ம்தேதி முதல் தடவையாக சீனாவின் குரல் ஆங்கில மொழி பேசும் உலகில் அறிவிப்பாளர் திருமதி. வெய் லின் அவர்களால் சென்றடைந்தது.

போர் உக்கிரமாக நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டமான‌ 1947, செப்டெம்பர் 11ம்தேதி சீனாவின் ஹெபெய் மாநிலத்தின், டைகாங் மலைப்பகுதியில் ஷாஹே என்ற‌ குக்கிராமத்தில் முதல் தடவையாக வானொலியில் அறிவிப்பாளர் திருமதி. வெய் லின் அவர்களால் ஆங்கில மொழி பேசும் உலகில் சென்றடைந்தது.

1949ல் சீனா குடியரசாக மாற்றம் கண்டபோது ஹெபெய் மாநிலத்தின்,டாய்ஹாங் மலைப் பிரதேசத்திலிருந்து (Taihang Mountains) வானொலி, சீனத் தலைநகரம் பெய்ஜிங்கிற்கு இடம்பெயர்ந்தது.

1950ம் ஆண்டு ஏப்ரல் 10ம் நாள் ரேடியோ பீகிங் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.1960களில் அல்பேனியாவில் வானொலி அஞ்சல் செய்யும் நிலையம் நிறுவப்பட்டு 1983ம் ஆண்டு வரை ஒலிபரப்பப்பட்டது.

1960களில் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள்

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் துவங்கியது. இந்தியா மற்றும் இலங்கைக்கு, தமிழ் ஒலிக்கத் துவங்கிய அற்புதம் ஆரவாரமாக நிகழ்ந்தேறியது.

1970களில் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள்

1984ம் ஆண்டு முதல் உள்நாட்டில் 2 வரிசைகளில் அந்நிய மொழிகள் ஒலிபரப்பலாயின. ஆங்கிலம், ஸ்பேனிஷ், அரபு, ஜெர்மன், கொரிய, ஜப்பானிய மற்றும் ரஷிய மொழிகளில் இசை நிகழ்ச்சிகள் என்று அதன் சிறகுகள் விரியத் துவங்கியது.

பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியா, ஸ்பெய்ன், கனடா, மாலி, பிரேசில், கியூபா, அமெரிக்கா முதலிய 10க்கும் அதிகமான நாடுகளின் வானொலி நிலையங்களுடன் நிகழ்ச்சி ஒத்துழைப்புறவை 1987ம் ஆண்டு முதல் சீன வானொலி நிலையம் மேற்கொண்டு அதன் எல்லையை விரிவாக்கம் செய்தது.

80களில் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள்

1993ம் ஆண்டு சனவரி 1ம்தேதி பீகிங் வானொலிநிலையம் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சீன சர்வதேச வானொலி நிலையமாக முகிழ்த்தது.

1997ல் சீனத் தமிழ் வானொலியின் இணையதளம் மூலம் அறிமுகப்படுத்தும் சோதனை முயற்சியில் ஈடுபட்டதில் வெற்றிகண்டு, 1998 டிசம்பர் திங்கள் 26ம்நாள் இணையதளத்தை நிறுவும் முயற்சிகளில் அயற்சி இல்லாமல் களமிறங்கியது. தற்போது சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, ரஷ்யா, ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம் உள்ளிட்ட 16 அந்நிய மொழிகளிலும் 17 மொழி இணையக் கிளைகள் இடம் பெறும் பன்னோக்க இணைய வலையம் நிறுவப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டில், தமிழ்ப் பணியாளர்களும் நேயர்களும்

2000ஆம் ஆண்டில் சீனத் தமிழ் வானொலி நிலையத்தின் இணைய தளம் அரசின் முக்கிய செய்தி இணைய தளமாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டிலிருந்து, கட்டுரை மற்றும் பொது அறிவுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தத் துவங்கியது. இப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பு நேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், சீனாவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்று வருவதுதான் இதன் சிறப்பம்சம். அப்போது முதல் வெளிநாட்டு வானொலிகளின் மூலம் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஆற்றலை அதிகரித்துள்ளது.

2002ஆம் ஆண்டு நேயர் தொடர்புப் பணியை மேலும் பயன் தரும் முறையில் கையாளும் வகையில், நேயர் மின்னணுப் பதிவேடு கையாளுவது நடைமுறைக்கு வந்தது.

2003ஆம் ஆண்டு ஜுலை திங்கள் முதல் ஆங்கிலம், ரஷியம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலான நிகழ்ச்சிகள், நாளுக்கு நாள் சுமார் 80 மணி நேரத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளின் மத்திய அலை மற்றும் பண்பலைவரிசை மூலம் நேரடியாக ஒலிபரப்பாகி, நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2003ல் 61 மொழிகளில் இணையதளம் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணமாக இணைய உலகில் வலம் வரத் துவங்கியது. சீனாவின் முன்னணி பெற்ற செய்தி நிறுவனங்களுள் ஒன்றாக இந்த இணையதளம் மக்களிடையே பிரசித்தி பெற்றது.

2004ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் நாள், 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகி வந்த சீனத் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் நாள்தோறும் ஒரு மணி நேர ஒலிபரப்பாக மாறி, முதல் ஒலிபரப்பு, மறு ஒலிபரப்பு என மொத்தம் இரண்டு மணி நேரமாக முன்னேறியது.

"சீனத் தமிழொலி," எனும் சீனத் தமிழ் வானொலியின் முதலாவது தமிழிதழ் 2004ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தமிழ்ப் பிரிவால் வெளியிடப்பட்டது.. "சீனத் தமிழொலி" இதழ், நேயர்களுக்கிடையில் பெரும் வரவேற்பைப் பெற்று வலம்வருகிற‌து.

2004ஆம் ஆண்டு ஜுலை 15ஆம் நாள், 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகி வந்த சீனத் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் நாள்தோறும் ஒரு மணி நேர ஒலிபரப்பாக மாறி, முதல் ஒலிபரப்பு, மறு ஒலிபரப்பு என மொத்தம் இரண்டு மணி நேரமாக முன்னேறியது.

2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளிலிருந்து ஹாங்காங் வட தொலைக்காட்சிச் சேவை மூலம், சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் ஒலிபரப்பு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் பண்பலை சேவையைத் தொடங்கியது. (2009ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், அப்பண்பலை சேவை நிறுத்தப்பட்டது.)

2006ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 27ம்தேதி சீனத் தமிழ் எஃப்.எம். கென்யாவின் நைரோபி நகரில் முகிழ்த்தது. அதே ஆண்டு நவம்பர்த் திங்கள் 19ம்தேதி லாவோசில் வியன்டியென்னில் சீன அதிபர் ஹு ஜின்டோவும் லாவோஸ் அதிபர் சோமலே சாயாசோன் அவர்களும் இணைந்து சீனத் தமிழ் வானொலியின் எஃப்.எம். வானொலி நிலையத்தை துவங்கிவைத்தனர்.

கைபேசி உபயோகிப்பாளர்கள் "m.cri.cn" என்று தட்டச்சினால் செய்திகள், வர்த்தகம்,பொழுதுபோக்கு மற்றும் பயணச்செய்திகளை அறிந்துகொள்ளும்வகையில் 2009ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 16ம்தேதி செல்லுமிடமெல்லாம் கேட்டு மகிழும் வண்ணம் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது, சீனத் தமிழ் வானொலியின் வரலாற்றில் புதிய மைல் கல் எனலாம்!

2010ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள், இலங்கைப் பண்பலை FM102 ஒலிபரப்பைத் தமிழ்ப் பிரிவு தொடங்கியது. 2012ஆம் ஆண்டு இறுதியில், அது FM97.9யாக மாறியது.

2009ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இந்த இணைய தளம் முதன்முறையாகச் சீரமைத்து வடிவமைக்கப்பட்டது. பிறகு, 2013ஆம் ஆண்டு ஜனவரி திங்களில், இரண்டாவது முறையாக அது சீரமைக்கப்பட்டு, மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இணைய தளத்தில், ஒலி, ஒளி, படங்கள் கொண்ட பல்லூடக வடிவத்தில், சீன மற்றும் உலகச் செய்திகள், சீனப் பண்பாடு, சீனச் சுற்றுலா பயணம், சீனாவில் தமிழர்கள், சீன மொழிப் பாடம் என பலதரப்பட்ட சிறந்த, சிந்தைக்கு விருந்தளிக்கும் தகவல்களை அளிக்கின்ற ஒலிபரப்பாகச் சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பு மாறியுள்ளது என்றால் அது மிகையில்லை. தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவர் தி. கலையரசி 2009ஆம் ஆண்டு சீன வானொலி முதன்மை அறிவிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவிப்பாளர் என்ற பதவியில் இது மிக உயர்ந்த புகழ் வாய்ந்ததாகும்

2010ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள், இலங்கைப் பண்பலை FM102 ஒலிபரப்பைத் தமிழ்ப் பிரிவு தொடங்கியது. 2012ஆம் ஆண்டு இறுதியில், அது FM97.9யாக மாறியது. சீன மொழியைக் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சியையும் தமிழ்ப் பிரிவு தயாரித்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டின் அக்டோபர் வரை, 61 அந்நிய மொழிகள், மெண்டரின் மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 3500 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. தமிழ் தவிர, பெங்காலி, உருது, ஹிந்தி ஆகிய 3 இந்திய மொழிகளிலும் சி.ஆர்.ஐ. தனது ஒலிபரப்புச் சேவைகளை வழங்கி வருகிறது.

2013ஆம் ஆண்டில், இணையதளத்தின் கைபேசி வடிவம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நேயர் கடிதங்கள்....

உலகில் எந்த வானொலி நிலையத்துக்கும் இல்லாத சிறப்பு சீனத் தமிழ் வானொலிக்கு உண்டு என்பதை என்னால் அழுத்தம் திருத்தமாகச் சொல்லமுடியும். அதுதான் நேயர்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள். 1963ஆம் ஆண்டு, நேயர்களிடமிருந்து இரண்டு கடிதங்கள் மட்டுமே கிடைத்த நிலை மாறி, ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கில் நேயர் கடிதங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடைமழைபோலக் கொட்டி வெள்ளப்பெருக்கெடுத்து வழிந்தோடுகிறது.

2010ஆம் ஆண்டில், 5 லட்சத்து 61 ஆயிரத்துக்கு மேலான கடிதங்கள், சீனத் தமிழ் வானொலிக்கு வந்து சேர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் இணையதளம் மூலமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களும் இப்போது தமிழ்ப்பிரிவிற்கு குவியத் துவங்கியுள்ளது.

பொன்விழா காணும் இந்த வானொலியின் இனிய‌நேயர்களாக‌, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, செளதி அரோபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பரவியுள்ளனர். தமிழ் நேயர்களின் நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 150ஆக உள்ளது. பதிவு செய்யப்பட்ட நேயர்களின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரத்துக்கும் கூடுதலாகும்.

சீன அரசு நட்புறவு விருது...

முதன்முதலில் இலங்கையிலிருந்து சென்ற தமிழாசிரியர் மாதகல், திரு.வ.கந்தசாமி பணியாற்றினார். அதன்பின்னர் இலங்கையிலிருந்து சீன வானொலியில் பணியாற்றவும், அயல்மொழிப் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்புப் பணிபுரியவும், தமிழ் கற்பிப்பதற்காகவும் தமிழாசிரியர் திரு.கே.சனகன், திருமதி ராணி இரத்தினதேவி, திரு.வீ .சின்னத்தம்பி ஆகியோர் பணியாற்றினர்.

50 ஆண்டுகளில் தமிழ்ப் பிரிவின் ஒளிமயமான சாதனைகளில், மொத்தமாக 9 தமிழ் நண்பர்கள், வெளிநாட்டு நிபுணர்களாக, தமிழ்ப் பிரிவில் சேர்ந்து, பணி புரிந்துள்ளனர். சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் முழுநேரமாகப் பணி புரிந்த 9 தமிழ் நிபுணர்கள்,இலங்கையைச் சேர்ந்த‌ மாதகல் கந்தசாமி, சின்னதம்பி, தமிழகத்தைச் சேர்ந்த ந.கடிகாசலம், சிவக்குமார், ராஜாராம், அந்தோனி கிளிட்டஸ், தமிழன்பன், புஷ்பா ரமணி, பாண்டியன் ஆகியோரடங்குவர். அவர்களில் பேராசிரியர் முனைவர் ந.கடிகாசலம், மூன்று முறையாக ஏறக்குறைய 12 ஆண்டுகள் சீனத் தமிழ் வானொலியில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக, அவரது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு, சீன அரசு நட்புறவு விருதை அவருக்கு வழங்கிக் கெளரவித்தது.

"சீனாவில் இன்ப உலா".....

"கலைமகள்" என்றழைக்கப்படும் "சாவோ ஜியாங்" சீனத் தமிழ் வானொலியின் தலைவர்.

இவர்"சீனாவில் இன்ப உலா"என்ற‌ புத்தகத்தை எழுதி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டுள்ளார்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எவருடைய உதவியுமின்றி தமிழில் சீனா சுற்றுலாத்தலங்கள் குறித்து எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் புத்தகம் எழுதிய முதல் சீனப்பெண்மணி இவர் என்ற‌பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் சீனப் பெருநகரங்களான பெய்ஜிங், சாங்காய் போன்ற நகரங்கள் தோன்றிய வரலாறு, திபெத்திய நாகரிகம், சீனர்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை எளிய‌முறையில் 26 கட்டுரைகளாக எழுதியுள்ளார். முதன்முறை சீனாவுக்குச் சுற்றுலா செல்பவர்களுக்குஇந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எள்முனையளவும் அய்யமில்லை.

சீனத் தமிழ் வானொலியின் தலைவர் கலைமகள் (சாவோ ஜியாங்-Zhao Jiang) தமிழ் பிரிவின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும்போது:-

சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு தொடங்கிய போது, நாள்தோறும் அரை மணி நேரம் தான் நிகழ்ச்சியை வழங்கப்பட்டது. சில தலைமுறை பணியாளர்களின் முயற்சி மூலம், தமிழ்ப்பிரிவு மென்மேலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இப்போது, சிற்றலை, பண்பலை, இணையதளம், தமிழொலி என்னும் இதழ், கைபேசி இணையம் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. பன்முக ஊடகமாக தமிழ்ப்பிரிவு மாறியுள்ளதாகக் கூறலாம். இன்றைய தமிழ்ப்பிரிவில் இளம் பணியாளர்கள் மிக அதிகம். இந்த இளைஞர்களின் புதிய கருத்துக்களால் தமிழ்ப்பிரிவின் வளர்ச்சி பெரிதும் முன்னேற்றப்பட்டு வருகிறது.

பெற்ற சாதனைகளை அடிப்படையாக கொண்டு, தமிழ்ப்பிரிவு தொடர்ந்து வளரும். எதிர்காலத்தில் ஒத்துழைப்பு என்பது, தமிழ்ப்பிரிவின் புதிய கடமையாக மாறும். நாங்கள் எங்களது திறனை வலுப்படுத்துவதோடு, பல்வேறு துறைகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள முயற்சி செய்வோம். குறிப்பாக, தமிழகத்தில் பண்பலை நிகழ்ச்சியைத் தொடங்குவது, கன்ஃப்யூசியஸ் கல்லூரி நிறுவுவது, தமிழொலி என்னும் இதழ் தமிழகத்தில் அச்சிட்டு வழங்குவது ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இவ்வாண்டு, தமிழ் ஒலிபரப்புத் தொடங்கிய பொன் விழா ஆண்டாகும். அனைவரின் கூட்டு முயற்சியில் தமிழ்ப்பிரிவு, மேலும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

தமிழ் ஒலிபரப்பு தென்னாசியா ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. தற்போது, சீனத் தமிழ் வானொலியில் 18 சீனப் பணியாளர்களும் 2 தமிழ்ப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

சீனத் தமிழ் வானொலியில் பணி புரிவோர்:-

கலைமகள் தமிழ்ப் பிரிவின் தலைவர் (சாவோ ஜியாங்-Zhao Jiang) (கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர் )

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040