• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி வரலாறு குறித்து என் பார்வையில் அன்றும் இன்றும் ஒரு சிறு கண்ணோட்டம்!
  2013-06-18 19:48:39  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன‌ப்ப‌ணியாள‌ர்க‌ள் எவ‌ர் பெய‌ரும் இல்லையே என்று பார்க்கிறீர்க‌ளா? மேற்சொன்ன‌ அனைவ‌ரும் சீன‌ப்ப‌ணியாள‌ர்க‌ளே!

த‌ங்க‌ள் பெய‌ரை அழ‌கு த‌மிழ்ப்பெய‌ராக‌ச் சூடிக்கொண்டுள்ள‌ன‌ர் இவ‌ர்க‌ள‌னைவ‌ருமே!இவர்களின் அளப்பரிய‌ அர்ப்பணிப்புப் பணி நம்மை வியக்க வைக்கிறது.

இன்று.....பொன்விழா.....

மூத்த மொழியே, புகழ் பூத்த மொழியே, நேற்று,இன்று, நாளை என்று நிலவுகின்ற‌ காலக்கணக்கைக் கடந்த மொழியாம்

எம் செம்மொழியாம் தமிழ் மொழி சீன வானொலி நிலையத்தில் தமிழ் ஒலிக்கத் துவங்கி ஐம்பது ஆண்டு பொன் விழா காணவுள்ள‌

சீன வானொலித் தமிழ் பிரிவிற்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் வாழ்த்தைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

இது உன் விழா...என் விழா ...இரண்டும் அல்ல‌

சீனத் தமிழ் வானொலியின் நேசிப்புத் தமிழர்கள்

தன் விழா என்று நினைக்கும்

சீன வானொலியின் தமிழ்ப் பிரிவின் பொன்னான பொன் விழா!

அமெரிக்காவில்.....

நான் அமெரிக்கா வந்த புதிதில்(1990களில்) ஃபோர்ட்வைன் என்ற நகரத்தில் தமிழ் பேசுபவர்களைக் காண்பது அரிதாக இருந்தது.

எதேச்சையாக ஒரு தமிழ்க் குடும்பத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டேன். அதன் பின் மின்னசோட்டா மாநிலத்தின் மினியா பொலிசு

நகரத்திற்கு போனபோது அங்குள்ள தமிழ் சங்கத்தை தேடிப் போனேன். அங்கு கூடிய தமிழர்கள் தமிழ் பேசவில்லை; அப்படியே

பேசினாலும் அது தமிங்கிலமாகவே இருந்தது. (இது குறித்து ஒரு கட்டுரையே "அமெரிக்காவில் தமிழ் என்று இணைய இதழ்களில்

எழுதி வெளியானது) ஒரு அந்நிய நாட்டில் தமிழ் பேசுபவர்களைக் ஒருவிதத் தவிப்போடு தாகத்தோடு தேடிக்கொண்டிருந்தபோதுதான்

1997ல் முதன் முதலாக சீன வானொலி ஒலிபரப்பு குறித்து அறிந்தேன். எனது ஓய்வு நேரங்களில் இணையதளங்களுக்கு எழுதுவதையும்கனடாவின் வான்கூவர் நகரில் தமிழ் வானொலியில் வாரம் ஒரு முறை, "செவிக்கினிய சிந்தனைகள்" என்ற செய்தியினை வழங்கத்துவங்கியிருந்தேன்.

1999ல் சீன வானொலி இணையதளம் பார்த்து வியந்தேன். எனது பணிப்பளுவில் எப்போதாவது நேரம் கிடைக்கும்போதும் மட்டுமே சீனத் தமிழ் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வந்தேன். ஆனால் இணையதளம் முழுமையான பயன்பட்டுக்கு வந்த பின் அன்றாடம் பலவிதமான‌ தகவல்களை அறிவதில் நாட்டம் கொண்டேன். சீனப்பண்பாடு, சீன உணவரங்கம், சுற்றுலா, அறிவியல்செய்திகள் என்று கால்நடைகளுக்கு நல்ல பசும்புல் கிடைத்தால்குனிந்த தலை நிமிராமல் மேய்வதில் கவனம்கொள்ளுமே அதுபோல நான் மூழ்கிவிடுவதுண்டு!

தேனீர் விரும்பி.....

இன்பப் பயணம் என்ற தலைப்பில் தாலி நகரம் என்ற இடத்தைக் குறித்த கட்டுரையில் தேனீர் குறித்த செய்தி படித்தேன். பொதுவாக‌ தேனீரில் சர்க்கரை போடாமல் அருந்துபவர்கள் உடல் நலம் குறித்த அக்கறையில்அல்லது மருத்துவர் ஆலோசனையின் பேரில்தான் அருந்துவார்கள். ஆனால் இந்தத் தாலி தலத்தின் வசிப்பிட மக்களான பெய் இன நட்பார்ந்த‌ மக்கள் 3 சுவை தேநீர் அளித்து உபசரிப்பார்கள் என்றும்,அது கசப்பான தேநீர், இனிப்பான தேநீர், நினைவு கூரும் தேநீர் என்றும் அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உள்ளது என்றும் வாசித்ததும் அதன் பிறகு நானும் தேனீர் விரும்பியாக மாறியதும் என் வாழ்வில் மறக்க இயலாதது!

சிங்தௌ நகரம், யுன்செ வனப்பூங்கா,ஹென்சான் கோயில், குவாங்சோவில் சுற்றுலா,தைய் இனக் கிராமம், கடலோர நகரான டியான்ஜின் சீனாவின் பாலைவனச் சோலை, வூயி மலை போன்ற தகவல்கள் எனக்குள் இந்தப் பகுதியை ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் போய்க் கண்குளிரக் காணவேண்டும் என்ற ஆவல் அடங்காமல் எழுந்தது!

சமூக வாழ்வு செய்தியில், சீனாவில் 56 தேசிய இனங்கள் இருக்கின்றனர் என்றும் பல்வேறு தேசிய இன மக்கள் இணக்கமாகுவும் இன்பமாகவும் வாழ்வதையும் இனம், மியௌ இனம், துங் இனம், திபெத்தினம், கொரிய இனம், ஹுய் இனம், சுவாங் இனம், தஜிக் இனம் என்றெல்லாம் பல்வேறு இனங்கள் வாழ்வதை எல்லாம் நேசித்து வாசித்தது என் அடிமன ஆழத்தில் உறைந்து கிடக்கிறது.

சீன தேசிய இன குடும்பம் ஒரு மிக நல்ல பயன் மிக்க தகவல்களை உள்ளடக்கியது என்பது மறுக்கவியலாத பேருண்மையாகும்.சீனாவின் மேற்குப் பகுதியின் பண்பாடு, உய்கூர் இன மாணவர்கள்போன்ற பல நல்ல தகவல்களை என்னுள் உள்வாங்கிய அற்புதப் பொழுதுகளவை!

உணவே மருந்து......

குறிப்பாக "விகுர்" இன மருத்துவம் குறித்து எனக்குள் பெரும் ஆர்வம் எழுந்தது. "மூலிகை மருந்து, தாதுப்பொருள், விலங்கு ஆகிய மூன்று வகை சிகிச்சையில், அவை, தத்தன் சனிச்சிறப்பியல்புடையதை அறிந்தேன். இது இயற்கை மருந்து என்பதால், அதன் பக்க விளைவு குறைவு. ஆனால், சிகிச்சை பயன்மிக்கது. உணவு மூலம் சிகிச்சை பெறுவதும், பராமரிப்பு மூலம் சிகிச்சை என்பது நாம் உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வது போல உணவு மூல சிகிச்சை என்பது,விகுர் இன மக்கள் தயாரித்தளிக்கும் வெவ்வேறான உணவுகளால் நோயைத் தடுத்து குணப்படுத்துவதாகும். இதையெல்லாம் நேரில் அறிந்து நமது பாரம்பரியப் பழக்கங்களை ஒட்டியமைந்த இதன் சிறப்பைக் காண இன்றளவும் என் மனம் ஏங்கிக்கொண்டுள்ளது.

சீன வானொலியைக் நான் தொடர்ச்சியாக கேட்பதும், அஞ்சல் அனுப்புவதும் என்று தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டது 2004ம் ஆண்டிலிருந்துதான். 2004ல் ஏரிக்கரையில் என்ற ஒரு சிறு சோகமான கதையைப் படித்தது என் மனதில் இன்னும் பசுமரத்தாணி பதிந்தது போல‌அதன் எச்சம் ஒட்டியே இருக்கிறது.

என்னை சீன வானொலித் தமிழ் பிரிவில் என்னை நானே பிணைத்துக்கொண்டேன். அதன் சுவாரசியச் செய்திகள் அவர்களின் பண்பாடு

குறித்த ஆர்வம் என்னை மேலும் தீவிரமாக ஈடுபாடு கொள்ள வைத்தது. தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகள், பொது அறிவுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றேன். தொலைபேசியின் ஊடாக அப்போதைய சீனவானொலி தமிழ் பிரிவின் தலைவர் திருமதி.கலையரசி அவர்கள் என்னைப் பலமுறை தொடர்புகொண்டு என் கருத்துக்களை ஒலிபரப்பினார்கள்.

இன்பப் பயணம்,பண்பாடும் கதையும்,சமூக வாழ்வு, சமூக வாழ்வு, சீன தேசிய இன குடும்பம், நல வாழ்வுப் பாதுகாப்பு, விளையாட்டுச் செய்திகள் என்று இதன் சுவையான தகவல்களை இரசித்தே வந்துள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன் என்னைக் கவர்ந்த செய்தி ஒன்றையும் இங்கே தருகிறேன்.

"மிக நீண்ட நூடுல்ஸ்"

"உலகின் மிகப்பெரிய தோசை, கேக், சாக்லேட் என்பது போல‌ உலகில் மிக நீண்ட நூடுல்ஸும் சேர்ந்துள்ளது என்ற செய்திதான் அது. நூடுல்ஸ் என்றாலே சீனாதானே. ஒரே ஒரு கிலோ மாவைக் கொண்டு 2853 கிமீட்டர் நீள நூடுல்ஸை தயாரித்து கின்னஸ் உலக சாதனையில் பதிவாகியுள்ளதை இணையதளத்தில் வெளியிட்ட செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் லி என்ஹாய் எனும் ஒரு சீனர். நூடுல்ஸ் தயாரிப்பதையே ஒரு வித்தைபோல் மாவை சுழற்றி வீசி அசத்தும் லி என்ஹாய் ஒரு சமையற்கலை வல்லுனராம். ஒரு கிலோ மாவைக்கொண்டு 2852 கிலோமீட்டர் நீள நூடுல்ஸ் செய்கிறார் என்றால் நிச்சயம் வல்லுனராகத்தானே இருக்க முடியும். 2852 கி.மீ. நூடுல்சு என்றால் அதன் நீளத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன். 2852 கி.மீ. என்பது கன்னியாகுமரியிலிருந்து புது டெல்லிவரை (2865கி.மீ) உள்ள தூரம்! சாலை வழியாகச் சென்றால் சுமார் 42 மணி நேரம் செல்ல வேண்டிய தூரம்! ஏ! அப்பா!?

என் சேமிப்புக் கிடங்கிலிருந்து இதோ நீங்கள் பார்த்து இரசிக்க அந்தப் படம் இதோ.....

2006ம் ஆண்டு அமெரிக்க சீன தமிழ் வானொலிநேயர் மன்றம் துவங்கினேன். தமிழகத்திலிருந்து என்னோடு பலர் தொடர்புகொண்டனர். நான் சீனத் தமிழ் வானொலி நேயர் மன்றத்துக்காக உருவாக்கிய வலைப்பூக்களைப் பார்த்த பேளுக்குறிச்சி நேயர் செந்தில் அவர்களுடைய நேயர் மன்றத்துக்காக‌ வலைப் பக்கங்களை உருவாக்கித் தர இயலுமா என்றார். அவருக்காக‌ அவருடைய நேயர் மன்றத்துக்கு உருவாக்கிகொடுத்தேன்.

வலைப்பூக்கள்.....

சீனத் தமிழ் வானொலி அமெரிக்க நேயர் மன்றத்துக்காக நான் உருவாக்கிய வலைப்பூக்களும் நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் மதுரை நேயர்

மன்றங்களுக்காக 2006-07களில் உருவாக்கிய வலைப்பூ முகவரிகள்:-

http://critamilusa.blogspot.com/

http://critamilcontest.blogspot.com/

http://critamilmaduraidtmanram.blogspot.com/

http://namakalcri.blogspot.com/

http://cri65.blogspot.com/

http://tamilcriusa.blogspot.com/2007/02/blog-post.html

அப்போதுதான்சேந்தமங்கலம் இரவிச்சந்திரன் பொதுஅறிவுப் போட்டியில் வென்று சீனப் பயணம் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் சீனப் பயணத்தை முடித்துவந்ததும் அவருடைய சீனப் பயணப் படங்களை அந்த வலைப் பக்கங்களில் ஏற்றிக்கொடுத்தேன்.

தமிழகத்தில்.....

நான் தமிழகம் சென்றிருந்தபோது நாமக்கல் செல்ல நேர்ந்தது. அப்போது அதுவரைநேரில் பார்த்திராத பேளுக்குறிச்சி செந்தில் மற்றும் சேந்தமங்கலம் இரவிச்சந்திரன் ஆகியோரைப் பார்க்கும் ஆவல் என்னுள் எழுந்தது. தொலைபேசியில் நான் தகவல் சொன்னபோது செந்தில் உற்சாகமாகிவிட்டார். ஏதோ நீண்டகாலம் பார்க்காத உறவினரைப் பார்ப்பதுபோல வரவேற்று என்னை சேந்தமங்கலம் இரவிச்சந்திரன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு எனக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சீனத் த‌மிழ் வானொலி நேயர் மன்ற நேயர்கள் அலுவலகம் முழுக்க நிறைந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி தேனீர் விருந்து கொடுத்து, எனக்கு அன்போடு நினைவுப் பரிசு எல்லாம் வழங்கிக் கெளரவித்ததை எண்ணிப் பார்க்கிறேன். சேந்தமங்கலம் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் அங்கேயே என்னை சீனத் தமிழ் வானொலிக்காக என்னை நேர்காணல் செய்யத் துவங்கிவிட்டார்.இந்த உறவுகள் எல்லாம் எனக்கு நட்பாக எப்படிக் கிடைத்தார்கள்? ஏதோ ஒரு நீண்ட பந்தம் இருப்பது போல தமிழக நேயர்மன்ற தலைவர் வளவனூர் செல்வம்,பாண்டிச்சேரியிலிருந்து பாலகுமார், முத்துசிவக்குமரன்....இன்னும் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். சரி இதாவது நான் சார்ந்துள்ள தாய்த் தமிழகம்! இன்னொரு நட்புற‌வுச் செய்தியையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அரிய பொக்கிசம்....

2010ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த என் இனிய நண்பரும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தன் குடும்பத்தோடு சீனப் பயணம் மேற்கொண்டிருந்தார். சீனாவில் பெய்ஜிங்கில் இருந்தபோது என்னிடம் பேசியபோது தமிழ் தெரிந்த முகங்கள் இங்கு இல்லையே என்று தன் மன ஆதங்கத்தைத் தெரிவித்தார். அப்போதைய தலைவர் தி.கலையரசி அவர்களைத் தொடர்பு கொண்டு எனது நண்பரின் வருகை குறித்து தெரிவித்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டேன். நண்பரின் தொடர்பு எண்ணில் தி.கலையரசி அவர்கள் தொடர்புகொண்டு பேசியபோது நண்பருக்கு வியப்புத் தாளவில்லை.

தமிழ் நாட்டிலிருந்து சீனாவுக்கு வந்து தலைமுறை தலைமுறையாக‌ வசிப்பவர்கள் கொஞ்சம் மழலைத் தமிழ் போல பேசுகிறார்கள் போல என்று நண்பர் நினைத்துவிட்டார்.

ஆனால் நண்பர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று தி.கலையரசி அவர்கள் சந்தித்தபோது நண்பருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சீனர்கள் இவ்வளவு அழகாக தமிழ் பேசுவார்களா என்று. அதன் பின் கலையரசி அவர்கள் சீன தமிழ் வானொலி அலுவலகம் அழைத்துப் போய் அவர்களை பேட்டி எல்லாம் எடுத்து ஒலிபரப்பியதையும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் பேசியபோது அவரால் நம்ப முடியாமல் திகைத்துப்போனதாக தமிழகம் திரும்பிய பிறகு குறிப்பிட்டார். இவ்வளவு சிறப்பாக பணிபுரியும் அவர்கள் தங்கள் பெயர்களையும் அழகு தமிழ் பெயர்களாக தேர்வு செய்து தாங்களே சூட்டிக்கொண்டு பணி புரிவது வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாதது என்று வியந்தும் மகிழ்ந்தும் பேசினார். "சீனவானொலித் தமிழ்ப் பணியாளர்கள் தமிழகம் வந்தால் தவறாமல் எனக்குத் தகவல் தாருங்கள். சிறப்பாக வரவேற்க வேண்டும்",என்று மிகுந்த உணர்ச்சி வயப்பட்டுக் கூறினார். இந்த நட்புறவு எனக்குக் கிடைத்த அரிய பொக்கிசமாகவே இன்றளவும் கருதுகிறேன்.

செம்மொழி மாநாட்டில்....

கோவை செம்மொழி மாநாட்டிற்கு அப்போதைய மாநாட்டுச் செயலாளரும் தஞ்சை பல்கலைக் கழக துணைவேந்தருமான‌ முனைவர்.இராசேந்திரன் அவர்களை, நான் அமெரிக்காவிலிருந்து அழைத்து தி. கலையரசி அவர்களைப் பங்கேற்கச் செய்யும்படி கேட்டேன்.

அவரும் அதற்கு ஆவன செய்து தி.கலையரசி அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள் என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன். இதைச் சொல்லும்போது நான் மட்டுமல்ல, நேயர்மன்ற நேயர்கள் இந்த வானொலியுடன் ஒரு குடும்ப உறவுபோல நட்பாக ஒருவருக்கொருவர் ஈடுபாட்டுடன் மிளிர்வதை பிறர் அறிந்துகொள்வார்கள்.

சீன உணவரங்கம் நிகழ்ச்சியை தற்போது கலையரசி அவர்களும் தமிழன்பன் அவர்களும் இணைந்து வழங்கிவருகின்றனர்.

தமிழன்பன் அவர்களின் கணீர் குரலொலி நம்மை வசீகரப்படுத்தும் விதமாக இருக்கும். சீனத் தமிழ் வானொலியில் பணிபுரியும்

ஒரே தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழன்பன்

அறிவியல் அற்புதங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து முன்னேறிவருகிறது. நேற்று ஒரு கண்டு பிடிப்பு செய்யப்பட்ட ஈரம் உலர்ந்து போகும் முன் இன்றைக்கு நேற்றைவிட புதிதான கண்டுபிடிப்பு மலர்கிறது. அதன் வாசம் எல்லோரின் சுவாசங்களுக்கும் சென்று சேர்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு சீன வானொலிச் செயற்பாட்டுக்கும் இன்றையச் செயற்பாட்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியும்.

கூகுள் ப்ளஸ், டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவுச் செய்து, இணைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு இணையத்தில் உடனடியாக பரிமாற்றம் செய்ய முயலப்போவதாக சீனவானொலித் தமிழ்ப் பிரிவின் இளைய பட்டாளம் அறிவித்துள்ளது. இதை இணையதளத்தின் அடுத்த கட்ட நகர்வாக நான் பார்க்கிறேன். சீன வானொலித் தமிழ் பிரிவிற்கு என்னாலியன்ற முழு ஒத்துழைப்பையும் நல்குவேன் என்று இந்தப் பொன்விழா ஆண்டில் உரத்துச் சொல்கிறேன்.

வாருங்கள் தோழர்களே, தோழியர்களே சீன வானொலித் தமிழ்த் தேர் வடம் பிடித்து இழுப்போம்! வானமே எல்லையென்றாலும் அதையும் தாண்டி வரலாறு படைப்போம் வாரீர்! வாரீர்!!

சீனத் தமிழ் வானொலியை நீங்களும் கேட்டு இரசித்து வானொலி நடாத்தும் போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகள்

பெற இங்கே சொடுக்குங்கள்:- https://tamil.cri.cn/

-ஆல்பர்ட், விஸ்கான்சின்,அமெரிக்கா.


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040