வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
1. கடந்த 20 ஆண்டுக்காலமாக, சீனப் பொருளாதாரமும், உள்நாட்டு உற்பத்தி மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொடர்ச்சி வளர்ச்சிக்குப் பின் சில காலம் தேக்க நிலை ஏற்படுவது இயல்பே. அமெரிக்கா மற்றும் இதாலி அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சி மந்தப் போக்கினால், சீனப் பொருளாதார வளர்ச்சியில் சிறிது தேக்க நிலைமை ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். இந்நிலையை அகற்ற சீனா எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை? மேலும், சீனப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் இருக்க மறைமுக பக்கபலமாக இருந்து வருகிறது. அந்நிலையில், உலகப் பொருளதாரத்தின் வளர்ச்சிக்கு சீனாவின் முயற்சிகள் எவ்வாறானதாக இருக்கும்?
2. சீனாவில், பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவினத்தைக் குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்? மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியை இழப்பீடு மூலம் ஈடுகட்டுவதை விட, வருமானம் குறைந்த மக்களுக்கு இலவசச் சிகிச்சை அளிக்கலாமே...? இந்தியாவில் கிராமப் புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வருமானம் குறைந்த மக்களுக்கு இலவசச் சிகிச்சை வழங்கப்படுகிறது. சீனாவிலும் இதுபோன்ற இலவச சிகிச்சை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் உண்டா?
3. கடந்த வாரம் சீனாவின் குன்மிங் நகரில், தொடர் வண்டி நிலையத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல், எனக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. சின்சியாங் உருமுச்சி பிரதேசத்திலிருந்து, இதர பகுதிகளுக்கும் தீவிரவாதம் பரவுகிறதோ என்ற கவலையை இத்தாக்குதல் எனக்கு ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதம், தீவிரவாதம், மதவாதம் இவை மூன்றும் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டிய நச்சுச் செடிகளாகும். சீனாவிலிருந்து தீவிரவாதம் முற்றாக ஒழிய வேண்டும் என சீனாவின் மீது மிகுந்த அன்பு கொண்ட நான் மனதார விரும்புகிறேன். இதற்கான செயல் திட்டங்களை சீனா வகுக்குமா?
4. தைவான் பிரதேசத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில மேலை நாடுகள் இராணுவ உதவிகளை வழங்கிக் கொண்டு வருகின்றன. இருதரப்பு உடன்படிக்கைகளைப் பற்றியும், ஐ.நா.கட்டுக்கோப்பு உடன்படிக்கைகளைப் பற்றியும் கவலைப்படாமல் அமெரிக்கா தொடர்ந்து தைவானுக்கு உதவி செய்கிறது. தாய்நாடு ஒன்றிணைப்பு என்ற இலட்சியம் நிறைவேறாத வரை இந்நிலை தொடர்ந்து கொண்டுதானிருக்கும். திபெத், ஹாங்காய் மற்றும் மகௌ ஆகியவற்றைத் தொடர்ந்து தைவான் பிரதேசம் எப்போது சீனாவுடன் இணைக்கப்படும்?
5. அதிக வளர்ச்சியும், அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேடும் இரட்டைக் குழந்தைகள் போன்றவை. வேகமாக வளர்ந்து வரும் சீனாவில், காற்றுமாசுபாடு உள்ளிட்ட சில சுற்றுச் சூழல் சீர்கேடுகள் ஏற்படுவது இயல்பே. அந்நிலையில், பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், அதற்கான பொறுப்பை ஏற்கவும் வளர்ந்த நாடுகள் மறுத்து வருகின்றன. மிகப் பெரும் வளரும் நாடான சீனா, இப்பிரச்னையை எவ்வாறு கையாளப்போகின்றது?