தமிழ்நாட்டில் சேலத்தில் பிறந்து, தமிழக அரசின் கலைச்செம்மல் விருது (1990), இந்திய அரசின் கலைக்கான உயரிய விருது (1988) என பல உயரிய விருதுகளைப் பெற்று, சப்பான்(1980), ஆத்திரேலியா (1982), செர்மனி (1984), டென்மார்க் (1988), நெதர்லாந்து (1989), என உலகின் பல நாடுகளிலும் கண்காட்சியை நடத்தி, தாந்திரீக ஓவிய மற்றும் சிற்பக்கலையை உலகம் முழுதும் பரப்பியக் கலைஞர் ஓவியர் கே. எம். கோபால்.
1928 ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்த இவர், சென்னையில் உள்ள கவின் கல்லூரியில் கல்வி கற்ற காலத்திலேயே மைசூர் தசரா கண்காட்சியில் முதல் பரிசினைப் பெற்றார். அதோடு, தம்முடைய ஆசிரியராக விளங்கிய தேவிஸ்ரீ ராய்பிரசாத் சௌத்ரியின் வழிகாட்டலில் பிரித்தானிய அரசின் MBE (Member of British Empire) க்கு விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பெற்றோர்கள் விரும்பாததால் பிரித்தானிய செல்லாமல் சென்னையிலேயே தங்கி ஜெமினி, வாகினி போன்ற திரைக் கூடங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றினார்.